Showing posts with label திரைவிமர்சனம். Show all posts
Showing posts with label திரைவிமர்சனம். Show all posts

Wednesday, September 27, 2017

கே டிவியில் பார்த்த படங்களின் விமர்சனத் தொகுப்பு - ஒரு இலக்கியப் பார்வை.

வழக்கமாக விமானப் பயணங்களில் நான் புத்தகங்கள் எதுவும் படிப்பதில்லை. இரண்டு நாட்களுக்குத் தொடரும் பெரும் பயணங்களிலுமே நான் இதைத்தான் கடைப்பிடிக்கிறேன். சமீபத்திய டப்ளின் இலக்கியப் பயணத்தின்போது கனெக்டிங் ஃப்ளைட்டிற்காக ஃப்ராங்க்ப்ரூட் விமான நிலையத்தில் ஒன்னரை மணி நேரங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. பொதுவாக கனெக்டிங் ஃப்ளைட்டிற்குக் காத்திருக்கும் சமயங்களில் விமான நிலையங்களில் இருக்கும் அழகிய இளம் மங்கையர்களைக் காண்பதற்கே நேரம் போதாக் குறையாக இருக்கும். அதனால் விமானநிலையத்தில் இருக்கும் முனியாண்டி விலாசிற்கோ, அன்னாச்சி கடைகளுக்கோ சென்று நேரத்தைப் போக்குவதில் விருப்பம் கிடையாது.

கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களாகக் கடைப்பிடித்து வரும் இந்தப் பழக்கம்,வழக்கமாக மாறியே பத்துவருடங்களைத் தாண்டிவிட்டது. ஆனால், இந்த முறை வழக்கத்திற்கும் மாறாக ஃப்ராங்க்ப்ரூட் விமானநிலையத்தில் இருக்கும் virgin புத்தகக் கடைக்குச் சென்று வெறுமனே உலாவிக்கொண்டிருந்தேன். உண்மையில் புத்தகங்கள் எதுவும் வாங்கும் உத்தேசத்தில் அல்ல. நான் சென்னையில் இருந்து பயணித்த லுஃப்தான்சா விமானத்தில் என் சீட்டிற்கு இரண்டு இருக்கைகள் தள்ளி அமர்ந்திருந்த அந்த அம்மணி என்னை வெகுவாகக் கவர்ந்திருந்தார். அவரும் ஃப்ராங்க்ப்ரூட் விமானநிலையத்தில் ஏதோ ஒரு கனெக்டிங் ஃப்ளைட்டிற்காகக் காத்திருப்பதாகவே தோன்றியது. அந்த அம்மணியைக் கவனித்துக் கொண்டே இருந்ததில் அவர் அந்தப் புத்தக அங்காடிக்குள் சென்றதால் நானும் அவருக்குத் தெரியாமல் அவரைத் தொடர்ந்து புத்தக அங்காடியில் என் வருகையைப் பதிவு செய்தேன். அப்பொழுதுதான் எதேச்சையாக இந்தப் புத்தகத்தைப் பார்க்க நேர்ந்தது.


நான் பின் தொடர்வதை அந்த அம்மணி எங்கேயோ கண்டுகொண்டதாகத் தோன்றியதால் நானும் புத்தகம் வாங்கத்தான் வந்தேன் என்பதை நிரூபிக்கும் பொருட்டாக அங்கே பெஸ்ட் செல்லர் புத்தக வகையில் இருந்த ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டேன். விமானத்தில் செல்லும் காலத்தில் அதைப் படிக்கும் எண்ணம் எல்லாம் அறவே இல்லை என்பதுதான் அப்போதைய மனநிலை. ஆனால், அந்தப் புத்தகம் என் வாழ்க்கையின் மறக்கவே முடியாத, என் சிந்தனைத் தளத்தில் மாபெரும் மாற்றத்தை உண்டாக்கும் படைப்பாக இருக்கும் என்று நான் நினைத்திருக்கவில்லை.

பில்லிங் செக்சனில் இருந்து திரும்புகையில் அந்த அம்மணி என் பார்வையில் இருந்து தப்பித்திருந்தார். இனி என்ன செய்வது என்று தெரியாமல் நேரத்தைப் பார்த்தபோது இன்னும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நான் காத்திருக்க வேண்டியிருக்கும் என்று தெரிந்தது. அழகான இளம் அம்மணியின் ஏளனப் பார்வைக்காக வாங்கிய அந்தப் புத்தகத்தை வெறிக்கப் பார்த்துக் கொண்டு அதன் அட்டைப் படத்தினையும், அதன் எழுத்தாளர் யார் என்பதையும் பார்த்தேன். பார்த்த மறுகணமே அந்த அம்மணியைத் தவறவிட்ட சோகமெல்லாம் எங்கோ மறைந்துபோனதாகத் தோன்றியது. ஆமாம். அது ஒரு தமிழக எழுத்தாளர் எழுதிய புத்தகம். தமிழில் எழுதப்பட்டு, ஆங்கிலத்திற்கு மொழிமாற்றம் செய்யப்பட்டிருந்த அந்தப் புத்தகம், இங்கே ஜெர்மனியின் பெஸ்ட் செல்லர் லிஸ்ட்டிலா என்று ஆச்சர்யமும் குழப்பமும் அடைந்தேன்.

எனது இந்த டப்ளின் பயணமுமே கூட ஒரு திட்டமிடப்படாத இலக்கியப் பயணம்தான். உலக அளவில் புனைகதையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் குறித்தான ஒரு கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தேன். என் பயணத்தின் நோக்கமே புனைவிலக்கியம் குறித்தான என் புரிதல்களை அங்கே கூடவிருக்கும் உலக இலக்கிய மேதைகளுடன் விவாதம் செய்வதுதான்.

ஆனால், என் கையில் இருக்கும் இந்தப் புத்தகம் பன்னிக்குட்டி ராம்சாமி எழுதிய கே-டிவியில் பார்த்த படங்களின் விமர்சனம் என்கிற விமர்சனப் புத்தகம். என் பயணத்திற்கும், நான் கலந்துகொள்ளும் கருத்தரங்கிற்கும் இது எவ்வகையிலும் பயன்படப்போவதில்லை என்று தெரிந்திருந்தாலும் ஒரு தமிழ் எழுத்தாளரின் புத்தகம் எப்படி ஜெர்மனியின் பெஸ்ட் செல்லரில் என்கிற ஆவல் உந்தித்தள்ள ஒவ்வொரு பக்கங்களாகப் புரட்ட ஆரம்பித்தேன்.

கிட்டத்தட்ட நான்கு மணி நேரங்கள் ஃப்ராங்க்ப்ரூட் விமானநிலையத்தில், ஒரே இடத்தில் அமர்ந்து மொத்தப் புத்தகத்தையும் வாசித்து முடித்தேன். அத்தனை விறுவிறுப்பான எழுத்துநடை. என் இலக்கிய வாழ்வில் என்னை இந்த அளவு புரட்டிப்போட்ட ஒரு நூல் இன்னும் வெளியாகவே இல்லை.

தமிழ் திரையுலகின் மிக முக்கியப் படங்களை கே-டிவியில் பார்த்து ரசித்திருக்கிறார் பன்னிக்குட்டி ராம்சாமி. ரசித்தது மட்டுமல்லாமல் தான் ரசித்ததை, உலகில் மனிதனாகப் பிறந்த ஒவ்வொரு உயிரும் ருசிக்க வேண்டுமென ஒவ்வொரு படத்தினைப் பற்றியும் திறம்பட விமர்சனமும் எழுதி, அதனை நூலாகவும் வெளியிட்டிருக்கிறார்.

திரைப்படங்கள் குறித்தான விமர்சனங்கள் பெரும்பாலும் அவற்றைப் பற்றின தவறான அபிப்பிராய பிம்பத்தை உருவாக்கும் தொனியிலேயே இன்றைய நவீன இணைய காணொளி விமர்சனங்கள் வெளியாகிவரும் இந்த வேளையில் பன்னிக்குட்டி ராம்சாமியின் இந்தப் புத்தகம் திரை விமர்சனங்கள் குறித்தான பார்வையின் கோணத்தினை முற்றாக மாற்ற வல்லது. இணைய ஊடகங்கள் நிகழ்த்திவரும் விமர்சனப் படுகொலைகளில் இருந்து தமிழ்த் திரையுலகினைக் காப்பாற்றக் கூடிய ஒரே வெளிச்சச் சூரியனாக பன்னிக்குட்டி ராம்சாமியின் இந்தப் படைப்பினைச் சொல்லலாம்.

புத்தகத்தின் முன்னட்டையில் இருந்து பின்னட்டைக்குப் பயணித்து முடிக்கும் வேளையில் தமிழ்த் திரையுலகின் நூற்றாண்டுகாலச் சாதனைகளை வெகு இயல்பாகவும், எளிமையாகவும் தேர்ந்த வாசகனால் கண்டடையவும், அசை போடவும் முடியும். தமிழ்த் திரைப்படங்களின் பெருமையைப் பேசும் இந்தப் புத்தகத்தில் அதே திரைப்படங்களின் அசட்டுத் தனமான காட்சிகளைப் பற்றிய கடும் விமர்சனங்களையும் வைத்திருப்பது கவனிக்கத்தக்கது.

காதல் காட்சிகளையும், காதல் காட்சிகளின் கனவுகளில் வரும் பாடல்களில் நாயகனும் நாயகியும் நான்கைந்து நபர்கள் சூழ நடனமாடிக் காதல் புரிவதையும் கடுமையாகச் சாடும் எழுத்தாளர், எந்த ஊரிலாவது நான்கைந்து நபர்கள் நம்மைக் குறுகுறுவெனப் பார்க்கும்போது காதல் வருமா என்கிற தர்க்க நியாயத்தையும் கூறி அந்தக் காட்சிகளின் அபத்தத்தைக் கிண்டல் செய்கிறார்.

டப்ளின் இலக்கியக் கருத்தரங்கில் இந்தப் புத்தகத்தினைக் கையில் வைத்துக் கொண்டேதான் மேடை ஏறினேன். அயர்லாந்திலும் இந்தப் புத்தகத்தின் ஐரிஷ் வெர்சன் பெஸ்ட் செல்லர் வரிசையில் இருப்பதாக கருத்தரங்கத்திற்கு வந்திருந்த பெரும்பாலான இலக்கியவாதிகள் கூறினார்கள்.

கருத்தரங்கத்திற்கு வந்திருந்த என் இஸ்ரேலிய நண்பன் அந்தப் புத்தகத்தினைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான். இஸ்ரேலிய உளவுப்படையான மொசாத்தில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் அவன் இந்தப் புத்தகத்தில் இருந்த பெரும்பாலான திரைப்படங்களின் திரைச்சொட்டுகளைப் பார்த்து கண்கள் விரிய ஆச்சர்யத்தில் மூழ்கிக் கொண்டே இருந்தான். அவைகள் என்னவென்று அந்த நண்பனிடம் விளக்கியதும் தான் மொசாத்தில் பணிபுரிய லாயக்கற்றவன் என்று கூறிக் கேவிக் கேவி அழ ஆரம்பித்துவிட்டான்.

அவன் சொன்னது இதுதான். மொசாத்தில் உளவாளியாகத் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு இறுதிக் கட்டச் சோதனையாக சகிப்புத் தன்மையைக் குறித்த சோதனை வைக்கப்படுமாம். அதில் தேறினால்தான் மொசாத்தில் பணி. தனது இறுதிச் சோதனையின்போது அந்தப் புத்தகத்தில் இருந்த தமிழ்ப் படங்கள் பலவற்றைப் போட்டுக் காட்டினார்களாம். அவனுடன் இறுதிச் சுற்றுக்குத் தகுதியான சுமார் எண்பத்து நான்கு பேர் பாதிப் படத்திற்கும் மேலாகப் பார்க்கச் சகிக்காமல் கதவைப் பிய்த்துக் கொண்டு ஓடிவிட்டார்களாம். இவனும் இன்னொரு நண்பனும் மட்டும்தான் தேர்வானார்களாம். அவர்களுமே கடைசியாகப் போட்ட படத்தினைப் பார்க்க முடியாமல் பாதியிலேயே ஓடி வந்துவிட்டதாகவும் கூறினான். இத்தனை கொடூரமான, சகிக்கவே முடியாத காதல் காட்சிகளைக் கொண்ட திரைப்படங்களை குடும்பமாக உட்கார்ந்து வேடிக்கை பார்க்கும் திறன் கொண்ட மக்களுடன் ஒப்பிடுகையில் தான் மிகவும் மோசமான திறனுடையவன் என்றும், அதனால் தான் அந்த வேலையில் இருப்பதற்கே லாயக்கற்றவன் என்றும் அழ ஆரம்பித்துவிட்டான். அதுமட்டுமில்லாமல், ஒவ்வொரு படத்தினையும் அது முடியும் வரையிலும் பார்த்து,அதனைக் குறித்து விமர்சனம் எழுதியிருக்கும் இந்த எழுத்தாளர் வாழும் கடவுளாகத்தான் இருப்பார் என்றும் அவர் பிறந்த மண்ணில் இருந்து வந்திருக்கும் நானும் கடவுளின் தூதுவன்தான் என்றும், என்னுடன் பழகக் கிடைத்த வாய்ப்பு இந்தப் பிறவியின் பெரும் பயன் என்றும் தளுதளுக்க ஆரம்பித்துவிட்டான். எனக்கு அவன் பிடியில் இருந்து தப்பி வருவது பெரும் பாடாகிப்போனது.

தமிழில் புத்தகங்கள் வாசிப்பதை நிறுத்தி கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கும் மேலாகிப் போனது. பன்னிக்குட்டி ராம்சாமியின் இந்தப் புத்தகத்தினை நான் ஆங்கிலத்தில்தான் வாசித்தேன். தமிழிலும் வெளியாகி இருக்குமா என்று தெரியவில்லை. தமிழில் புத்தகம் வாசிக்கும் நண்பர்கள் இது குறித்து விசாரித்துப் பார்க்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கிறேன். தமிழில் வெளியாகி இருக்காதபட்சத்தில் இதனை உடனடியாகத் தமிழில் மொழிபெயர்க்க வேண்டியது தலையாய கடமை.

தமிழ் திரையுலகில் தனது காலடித் தடத்தினை நினைவுச் சின்னமாக்கியவர்கள் தொடங்கி, தற்பொழுதுதான் காலடி எடுத்து வைத்திருக்கும் புதியவர்கள் வரையில் எல்லோர் கையிலும் இருக்க வேண்டிய முக்கியமான புத்தகமாகவே பன்னிக்குட்டி ராம்சாமியின் கே-டிவியில் பார்த்த படங்களின் விமர்சனத் தொகுப்பினைப் பார்க்கிறேன்.

Wednesday, February 3, 2016

சமகால திரைவிமர்சனப் படைப்பிலக்கியங்கள - ஒரு பார்வை!

அன்பின் ப.ரா,

இரண்டு நாட்களுக்கும் முன்பாக நானும் என் அறைத் தோழனும் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஒன்றினைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அப்பொழுது அந்தப் படத்தைப் பற்றி நமது இணைய சமூகம் என்ன நினைக்கிறது என்றறிவதற்காக இணையத்தில் உலாவிக் கொண்டிருந்தேன். அப்பொழுது அந்தப் படத்தினைப் பற்றிய இலக்கியத் தரத்திலான விமர்சனக் கட்டுரை ஒன்றினைக் காண நேர்ந்தது. அதில் இருந்தவை நிச்சயமாகத் தமிழ் எழுத்துக்கள்தான். ஆனால், சேர்த்துப் படிக்கையில் அது வேறொரு மொழியாகத் தெரிந்தது. என் நண்பனிடம் கொடுத்து அதனைப் படிக்கச் சொன்னேன். நீண்ட நேரம் அதைப் படித்தான். தமிழ் வழிக் கல்வி கற்றவன்தான்.

முதலில் அவன் நேராகவும், செல்ஃபோனை நேராகவும் பிடித்துப் படித்தான். பின்னர் செல்ஃபோனைத் தலைகீழாகப் பிடித்துக் கொண்டு கொஞ்ச நேரம் படித்தான். அதன் பின்னர் செல்ஃபோனை என் கையில் கொடுத்துவிட்டு, அங்கிருந்த இருக்கையில் அப்படியே தலைகீழாக நின்று கொண்டு படித்தான். மறுபடி செல்ஃபோனைத் தலைகீழாகப் பிடிக்கும்படிக் கூறிக்கொண்டு மறுபடியும் படித்தான். கடைசியில் அந்தப் படம் முடிந்துவிட்டது. இவன் இன்னமும் விமர்சனத்தைப் படித்து முடிக்கவில்லை. 

இப்பொழுதெல்லாம் நள்ளிரவில் திடீரென எழுந்து விழுமியங்கள், எச்சங்கள், கோட்பாடுகள், நுண் கருத்துத் திணிப்புக்கள், அல்லலுறும் மனது, மனப்பகிர்த் துளிகளின் பிம்பங்கள் என்றெல்லாம் பேச ஆரம்பித்துவிடுகிறான். திரைப்படங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை விடவும் அதைக் குறித்த இலக்கிய விமர்சனங்கள் இந்தளவு தாக்கத்தை ஏற்படுத்துமா என்று பிரமிப்பாக இருக்கிறது.

தமிழின் மிக முக்கியமான ஆளுமையான தாங்கள், திரைப்படம் குறித்த இலக்கிய விமர்சனங்களின் தாக்கம் குறித்து என்ன நினைக்கிறீர்கள். சுய உணர்வு நிலையில்லாத தமிழ்ச் சமூகத்தில் இது போன்ற உன்னதமான விமர்சனங்கள் உள்ளிழுத்துக் கொள்ளப்படும் என்று கருதுகிறீர்களா?  
இப்படிக்கு
Selvakumar Palanisamy


அன்பின் செல்வா,

படத்தை பார்த்துவிட்டு விமர்சனத்தை படிக்க முயற்சி செய்திருக்கிறீர்கள். விமர்சனத்தை படிக்கும் முன் படத்தை பார்ப்பது என்பது கக்கா போகும் முன் கழுவுவதை போன்றது. தவறேதும் இல்லையென்றாலும் சரி என்று சொல்ல முடியாது அல்லவா? அது இருக்கட்டும், விமர்சனத்திற்கு வருவோம். இலக்கியத் தரத்திலான விமர்சனம் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். அது இலக்கியத்தரம் என்று முன்பே தாங்கள் அறிந்திருப்பது மிக்க மகிழ்ச்சி. ஆனால் தமிழில் இலக்கியம் என்று வந்துவிட்டால் அதை வாசிப்பதற்கு முன்னர்  சில விஷயங்களை உள்வாங்கி விளங்கிக் கொள்ள வேண்டும். 


தற்கால தமிழ் இலக்கிய சூழலில் பல்வேறு ஞானமரபுகள் தோன்றி வளர்த்தெடுக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொன்றும் தமக்கென தனித்தன்மையான எச்சங்களை விரவி வைத்துக் கொண்டிருக்கின்றன. அவற்றின் கோட்பாடுகள் பெரும்பாலும் தொன்மையான விழுமியங்களில் இருந்து கடனாக பெறப்பட்டவையே. அங்கே காணப்படும் நுண்ணரசியல், பல நேரங்களில் ஞானமரபுகளை உடைத்தெறிவதாக இருந்த போதும், ஆழமான படிமங்கள் ஊடான கருத்து திணிப்புகள் ஏற்படுத்தி வரும் பிம்பங்கள் இந்த கட்டமைப்புகளைத் தக்க வைக்கும் வேலையை இடையறாது செய்து வருகின்றன. இவற்றை அறிந்திருந்தால் மட்டுமே தமிழ் இலக்கிய கட்டுரைகளை வாசிக்க முடியும். தெரியாமல் வாசித்து விட்டீர்கள் என்றால் அது இலக்கிய கட்டுரையே அல்ல என்று அறிக. ஆகவே நீங்கள் உடனடியாக ஏதாவது ஒரு இலக்கிய ஞானமரபை தெரிவு செய்து, ஆசான் ஒருவரை பிம்பமாக ஏற்றுக்கொள்ள முயல வேண்டும்.  

நிற்க. இப்போது உங்கள் நண்பரின் பிரச்சனைக்கு வருவோம். செல்போனை தலைகீழாக வைத்தும், தானே தலைகீழாக நின்றும் படிக்க முயற்சித்ததாக கூறி இருக்கிறீர்கள். அதுதான் நீங்கள் இருவரும் செய்த இமாலய தவறு. இலக்கியம் வளர்ப்பதற்கென்றே அரசு ஆங்காங்கே கடைகள் கட்டி சில நீர்மங்களை வினியோகம் செய்து வருவதை அறியாமல் நீங்கள் தமிழராக இருக்கவே வாய்ப்பில்லை. இலக்கிய விமர்சனம் படிக்க வேண்டும் என்று முடிவு செய்த மறுகணமே நீங்கள் அந்த கடைகளுக்கு விஜயம் செய்திருக்க வேண்டும். அங்கே அதைவிட இலக்கியத்தரம் மிக்க விமர்சனங்கள் வாயால் எழுதப்படுவதை செவிகுளிர பார்த்திருக்கலாம். தலைகீழாக, ஒருக்களித்தவாறு, கோணலாக, நேராக என்று அனைத்து தளங்களிலும் ஒரே நேரத்தில் இலக்கியம் வாசித்த அனுபவம் உடனடியாகக் கிடைத்திருக்கும். 

இது எதையும் செய்யாமல் நேரடியாக ஒரு இலக்கிய விமர்சனத்தை படிக்க வைத்து உங்கள் நண்பரை சுய மனமுரண்டு நிலையை அடைய வைத்திருக்கிறீர்கள். அவரை சரி செய்ய இப்போது ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. நள்ளிரவில் எழுந்து அவர் கூச்சலிடும் போது, ’தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி’ என்று சத்தமாக அவர் காதில் கத்தவும். ஆரம்பநிலை என்றால் உடனே சரியாகி விடுவார். அப்படியும் அடங்கவில்லை என்றால் ’சாட்டையடி பதிவு தோழர்’ என்று கத்தவும். இதற்கும் அடங்காத முற்றிய நிலை என்றால் அதற்கு இன்னொரு வழி இருக்கிறது.  ’சார் பத்மபூசன் வேணுமா’ என்று காதில் மிக மெதுவாக ரகசியம் பேசுவது போன்ற தொனியில் கேக்கவும்.... அடங்கியே தீருவார்!

திரைப்படங்களுக்கு எழுதப்படும் இலக்கியத்தரமான விமர்சனங்கள் குறித்து எமக்கு எப்பொழுதும் ஆழ்ந்த கவலை உண்டு. தமிழ்ப்படங்களே இலக்கியத்தின் உச்சகட்டம் எனும்போது அதை இலக்கியத் தரமாக விமர்சிக்கிறேன் என்பதே மிகப்பெரும் முரண்நகையாகும். இத்தகைய விமர்சனங்களில் காணப்படும் மிகைப்புகழ்ச்சிகள், குதர்க்க வாதங்கள், அதீத சொல்லாடல்கள், எள்ளல்கள் அனைத்தும் நம் விஜய் அண்ணாவின் ஓப்பனிங் சாங்கில் அவர் பார்க்கும் ஒரே ஒரு ஓரப் பார்வைக்கு அருகில் கூட வர இயலாது என்பதே எம் தெளிவு...!


இப்படிக்கு

பன்னிக்குட்டி ராம்சாமி