Thursday, February 24, 2011

நடுநிசி நாய்கள் 18+ ஒரு பார்வை!


முதலில் எனக்கு இதைப்பார்க்க வேண்டும் என்ற ஆர்வம்  சிறிதும் இல்லை..இருந்தாலும் உள்ளுக்குள் ஒரு மெல்லிய ஆசை தலைதூக்கியது! எவ்வளவோ பார்த்திட்டோம் இதையும் பார்த்தால் என்ன  என்று?! ஆனால் என் எண்ணத்தை என் நண்பர்களிடம் சொன்னபோது...அதிகமாக பயமுறுத்தினார்கள்... அதன் கொடூரமான காட்சிகளை உன்னால் பார்க்க முடியாது..நீ சின்னப்பையன் இந்த வேண்டாத வேலை வேண்டாமென்று..இன்னும் என்னென்னமோ சொன்னார்கள்..இருந்தாலும் நான் முடிவெடுத்து விட்டேன்! நடு நிசி நாய்களை பார்த்து விடுவதென்று!
 
முடிவெடுத்து விட்டேனே தவிர என்றைக்கு என்று முடிவு செய்யவில்லை...பகலில் கண்டிப்பாக முடியாது! இரவு நேரம்தான் லாயக்கு..ஆனால் இரவில் வீட்டை விட்ட வெளியில் சென்றால் காரணம் கேட்பார்கள், உண்மையான காரணம் கூற முடியாது! தடுத்து விடுவார்கள்..என் ஆசை நிராசை ஆகிவிடும்! இருந்தாலும் அதற்கான நாளும் தோதாக வந்தது....வீட்டில் ஒரு திருமணத்திற்கு முதல் நாளே கிளம்பி சென்று விட்டார்கள்...இன்றைய நாளை தவற விடக்கூடாது என்று முடிவெடுத்துக்கொண்டேன்...நண்பர்களிடம் சொல்லாமல் தனியாக சென்று ரசிப்பது என்று முடிவெடுத்துக்கொண்டேன்! ஏனென்றால்....நண்பர்கள் நடு நிசி நாய்களைப்பற்றி சொன்னவிதம் அப்படி! இதில் இன்செஸ்ட் கூட இருக்கும் என்றார்கள்..அதனால் அவர்களுடன் பார்க்க கூச்சமாக இருந்தது..அதனால்தான் அவர்களைத்தவிர்த்தேன்!
 
மாலை மங்கியதும் என் கண்கள் கடிகாரத்திலே நிலைத்திருந்து..ஒன்பது மணிக்கு கிளம்பினால்தான் நண்பர்கள் குறிப்பிட்ட அந்த தியேட்டருக்கு அருகில் செல்ல முடியும்!அதனால் கடிகாரத்துக்கு போட்டியாக நிமிடங்களை எண்ணிக்கொண்டிருந்தேன்! ஒன்பது மணி அடித்ததும் பரபரவென செயல்பட்டு வீட்டை பூட்டிக்கொண்டு அந்த தியேட்டரை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்! நடக்கும்போது என் மனதில் எதிர்பார்ப்பு..பயம்..போன்ற கலவையான உணர்சிகள் வந்து போனது! இருந்தாலும் பார்த்தே தீருவது என்ற முடிவுடன் நடந்தேன்!
 
தியேட்டருக்கு அருகில் சென்றதும் நான் எதிர்பார்த்த அளவு கூட்டம் இல்லை..அதனால் கூச்சத்தை விட்டு ஒரு டீக்கடை பார்த்து ஒதுங்கி நின்றேன்! நேரம் ஆக ஆக...ஒன்றன் பின் ஒன்றாக வரத்துவங்கியது........இன்னும் கொஞ்சம் நேரம் காத்திருந்தேன்......
 
 
மணி பன்னிரெண்டை கடந்ததும் நான் எதிர்பார்த்தபடியே...நடுநிசி நாய்கள் கூட்டமாக வந்து தியேட்டருக்கு முன்னாள் விளையாடதுவங்கியதுகள்! அவைகளின் கொஞ்சல் என்ன....கொடூரமான சண்டை என்ன...அப்பா.....எனக்கு மகிழ்ச்சியும் பயமும் மாறி மாறி வந்தது...ஒரு மணிநேரம் அந்த நடுநிசி நாய்களை ரசித்துவிட்டு வீடு திரும்ப ஆரம்பித்தேன்!
 
சரி....இதுக்கு ஏன் 18+ என்கிறீர்களா?.....நான் எண்ணியபோது நடுநிசி நாய்கள் பதினெட்டுக்கு மேல் இருந்தது...கரெக்ட்டாக தெரியவில்லை..அதனால்தான் 18+ என்று போட்டேன்! உங்களுக்கும் இந்த நடுநிசி நாய்கள் அனுபவம் வேண்டுமா? அந்த தியேட்டருக்கு செல்லுங்கள்!
 

டெரர் கும்மிக்காக
வைகை

Friday, February 18, 2011

சரித்திரக் கதை

முன்குறிப்பு : சரித்திர நாவல்கள் , சரித்திரக்கதைகள் எல்லாம் படிச்சிருப்பீங்க. அந்த வகைல அதாவது அந்த எழுத்து நடைல இன்னிக்கு ஒரு சரித்திரக்கதை படிங்க. இது முழுக்க முழுக்க கற்பனை.!

கி.பி இரண்டாம் நூற்றாண்டின் மிக முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தப் போகும் செய்தி அந்த ஒற்றனிடம் தெரிவிக்கப்பட்டது. அந்தச் செய்தியை விடிவதற்கு முன்னர் மன்னரிடம் சேர்த்தாக வேண்டிய  கட்டாயமும் அவனை ஆட்கொண்டது. ஆம் மன்னர் மரணப்படுக்கையில் இருக்கிறார். இந்தச் செய்தி அவரை நிச்சயம் உயிர் பிழைக்க வைக்கும் என்பது மருத்துவர்களின் கணிப்பு.

மன்னரின் அரண்மனை நோக்கிப் பயணமானான் ஒற்றன். இரண்டாம் ஜாமத்தின் பாதியில் தொடங்கியது அவனது பயணம். உண்மையில் இதற்கு முன்னர் அவன் இப்படி ஒரு பயணம் மேற்கொண்டதில்லை. வௌவால்களின் சத்தம் விண்ணைக் கிழித்தது என்றால் அது மிகையல்ல. ஒரு வித அச்சத்துடனே ஒற்றன் தனது குதிரையைத் தேடி அது கட்டப்பட்டிருந்த லாயத்திற்குச் சென்றான்.

அன்று அமாவாசை இருள் என்பதுடன் மேகங்களும் தன் பங்கிற்கு நட்சத்திர  வெளிச்சத்தையும் உறிஞ்சிகொண்டன. இருந்தபோதிலும் குதிரை லாயத்தில்  ஏற்கெனவே இருந்த அனுபவம் அவனை சரியாக குதிரையை கட்டவிழ்த்து குதிரையின் மீது ஏறி உட்கார வைத்தது. குதிரையின் மீது உட்கார்ந்த ஒற்றன் சற்றே அதிர்ந்தான். குதிரையின் தாம்புக்கயிறு சரியாகக் கட்டப்படாமல் இருந்தது. அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் குதிரை ஒற்றனின் கட்டுப்பாடில்லாமல் ஓடத்துவங்கியது.

உண்மையில் அவன் இதனை எதிர்பார்த்திருக்கவில்லை. ஆம் அப்படி ஒரு அசுரவேகம். இதுவரை அவன் இப்படியொரு வேகத்தைக் கண்டதில்லை. இந்த  அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் அந்தக் குதிரை அவனை ஒரு பாழடைந்த  மண்டபத்தின் முன் செல்கையில் கீழே தள்ளிவிட்டு ஓடத்துவங்கியது. இப்பொழுதுதான் அதனைக் கண்டான். உண்மையில் அவன் வந்தது குதிரை அல்ல, கழுதை. யாரோ அவனது குதிரையைத் திருடிச் சென்றிருந்தனர். தற்போதைய அரசியல் வாதியாக இருந்திருந்தால் இது எதிர்க்கட்சிகளின் திட்டமிட்ட சதி என்று அறிக்கை விட்டிருப்பான்.

கீழே விழுந்து எழுந்தவனுக்கு அடுத்த ஆச்சர்யம் காத்திருந்தது. ஆம் அவன் விழுந்த இடம் சற்றே விசித்திரமாகத் தோற்றமளித்தது. அது ஒரு பாழடைந்த   அரண்மனை போலத் தோற்றம் அளித்தது.அநேக இடங்கள் சிதிலமடைந்திருந்தன. அதன் முன்மண்டபம் பாதி உடைக்கப்பட்டிருந்தது. மேலும் மேற்கூரைகளில் பல இடங்களில் அம்புகள் தைக்கப்பட்டிருந்தது  இதற்கு முன்னர் நடந்த போரினை நினைவுபடுத்தின.

அந்தப் போரினைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தவனின் கவனத்தை பின்னாலிருந்து வந்த கரடியின் உறுமல் சத்தம் சப்த நாடிகளையும் ஒரு நிமிடம் ஆட்டியது. இதயம் ஒரு நிமிடம் துடிப்பதை நிறுத்திவிட்டு கரடி கடித்தால் என்ன ஆகும் என்ற கற்பனையை மூளைக்கு மின்னஞ்சல் அனுப்பிக் கொண்டிருந்தது. அந்த இருளில் அவனால் எதுவும் செய்துவிட முடியாது என்று அவனது உள் மனம் கலங்கிப்போயிருந்தது . அதே சமயம் அவன் எதிர்பார்த்த அந்த ஆபத்து அவன் முன்னாள் வந்தது. ஆம் அந்தக் கரடி இருளிலும் இவனை நோக்கி வந்து கொண்டிருந்தது. 

இனியும் தாமத்திதால் உயிர் பிழைக்க முடியாது என்பதை உணர்தவன் காட்டுக்குள் ஓடத்துவங்கினான். இதுவரை அப்படி ஒரு ஓட்டத்தை அவன் ஓடியதில்லை. மாரத்தான் ஓட்டம் அவனிடம் இருந்துதான் துவங்கியதோ என்ற சந்தேகம் நம்மை ஆட்கொள்ளும் அளவிற்கு ஓடிக்கொண்டிருந்தான். பின்னங்கால் பிடரியில் அடிப்பது என்று கேள்விப்பட்டவன், இப்பொழுதான் அதனை அறிந்தவாறு ஓடிக்கொண்டிருந்தான். நிச்சயம் அவனது ஓட்டம் கின்னஸ் புத்தகத்தில் எழுதவேண்டியதாக இருந்தது. அவனைத் துரத்திக்கொண்டு வந்த கரடி பாதியிலேயே மயங்கி விழுந்ததையும் அறியாமல் ஓடிக்கொண்டிருந்தான். 

அதிவேகத்தில் ஓடிகொண்டிருந்தவனை அந்த இடம் மேலும் திகிலூட்டியது. ஆம் அமாவாசை இருட்டில் அப்படி ஒரு வெளிச்சம். அந்த வெளிச்சம் எங்கிருந்து வருகிறது என்று பார்க்கும் துணிச்சல் அவனுக்குள் இல்லை. அதனால் இதுவும் ஏதோ பிரச்சினை என்பதாய்க் கற்பனை செய்து ஓட்டத்தின் வேகத்தை மேலும் சற்றுக்கூட்டினான். இந்த வேலை செய்வதற்கு கோழிமுட்டைக்கு மொட்டை அடித்துப் பிழைத்துக்கொள்ளலாம் என்று தோன்றியது. இருந்த போதிலும் மன்னரின் வாழ்க்கை அவன் கையில் இருந்த கடிதத்தில் இருக்கின்றது என்பதில் சற்றே நிம்மதியானான்.

இப்படி ஓடிக்கொண்டிருந்தவனுக்கு தான் எந்த திசையில் ஓடிக்கொண்டிருக்கிறோம் அரண்மனை எங்கு உள்ளது என்ற குழப்பத்தில் தலை சுற்றுவதுபோல உணர்ந்தான். ஆனால் தான் கொண்ட காரியத்தில் வெற்றிபெற்றே தீர வேண்டும் என்பதில் மட்டும் குறியாக இருந்தவன் எப்படியேனும் அந்தக் கடித்ததை மன்னரிடம் சேர்த்துவிட ஆசைப்பட்டான். அவனது ஆசை பொய்போகவில்லை. ஆம் அவனுக்கு அரண்மனை சங்குச் சத்தம் காதைக்கிழித்தது. ஒருவேளை அரசர்தான் மண்டையைப் போட்டுவிட்டரோ என்று ஒருபுறம் நினைவு ஓடாமல் இல்லை.

இருந்தபோதிலும் மனதை திடப்படுத்திக்கொண்டவன் அரண்மனையை அடைந்தான். தான் வந்த செய்தியை அமைச்சரிடம் தெரியப்படுத்தியவன் அமைச்சரின் பார்வையில் இருந்த சோகம் அவனுக்குள் மன்னர் இறந்துவிட்டார் என்ற அச்சத்தை மேலும் அதிகரித்தது. இருந்தபோதிலும் மன்னரின் உடல்நலம் பற்றி வினவினான். அமைச்சர் சோகம் தோய்ந்த குரலில் சொன்னார் " இன்னும் உயிர் இருக்கு ". இதைகேட்ட ஒற்றனின் கால்கள் யாருடைய அனுமதிக்கும் காத்திராமல் நேரே மன்னர் இருந்த அறையை நோக்கிச் சென்றன.

மன்னரைச் சுற்றி இருந்த கூட்டத்தை விலக்கிவிட்டு அவரின் கட்டிலருகில் மண்டியிட்டு அமர்ந்தவன் தான் கொண்டுவந்த உறையைப் பிரிக்க ஆரம்பித்தான். பட்டால் செய்திருந்த அந்த உறை அவனை ஆச்சர்யப்படுத்தியது. இன்னும் சொல்லப்போனால் அந்தப் பட்டுத்துணியை ஆட்டையைப் போட்டு விடவேண்டுமென்ற எண்ணம் அவன் மனதில் ஓடாமல் இல்லை. பட்டுத்துணியை பிரித்தவன் உள்ளிருந்த எழுத்துக்களை ஒவ்வொன்றாக எழுத்துக்கூட்டி வாசிக்க ஆரம்பித்தான்.அதைக் கேட்ட அரசர் முகத்தில் அப்படியொரு சந்தோசம் , தனக்கு எண்பது வயது ஆகிவிட்டது என்பதையும் மறந்து கட்டிலில் இருந்து ஒரே தாவாகத் தாவி பல்லக்கில் அமர்ந்து நேரகாக கடைக்குப் போகுமாறு ஆணையிட்டார். அதில் எழுதப்பட்டிருந்தது இதுதான் " PARLE -G இப்போ 3 ரூபாய்தான் /-"


நீதி : இப்போ PARLE -G விளம்பரம் வரதில்லை..


பின்குறிப்பு : இதுல வர்ற அந்த முட்டைக்கு மொட்டை அடிக்கிறது மட்டும் என்னோட கற்பனை இல்லை. அது நேத்திக்கு என்னோட மூஞ்சிப்புத்தாக மொக்கைல பாலயோகா அண்ணன் சொன்னது.அத இங்க போய் பார்த்துகோங்க. 

Wednesday, February 9, 2011

செல்வா கதைகள்

முன் குறிப்பு: நீங்க கோமாளி ப்ளாக்ல செல்வா கதைகள் படிச்சிருப்பீங்க. அதுல செல்வா அவனோட கற்பனைல செல்வா கதைகள் எழுதி இருப்பான். கற்பனைன்னு தான் சொல்லச்சொன்னான். நீங்க அதெல்லாம் உண்மையா நடந்துதுன்னு நினைச்சுக்காதீங்க. அதே மாதிரி நானும் சில ஜோக்ஸ் செல்வா கதைகள் மாதிரி முயற்சி பண்ணிருக்கேன்.!
மரியாதையா செல்வாவோட மொக்கையை படி!

செல்வா தன் நண்பரிடம் கூறினார் “என்னை எல்லோரும் கடவுளா நினைக்கிறாங்க”

“அப்படியா?”

“ஆமாம் நான் எப்ப போனாலும், அடக்கடவுளே நீ மறுபடியும் வந்துட்டியான்னு சொல்வாங்க!”

----------------------------------------------------------------

செல்வாவும் அவர் நண்பரும் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது காக்கை அவர் மேல் எச்சமிட்டு விட்டது. “சே இந்த காக்காங்களே இப்படித்தான்..” என திட்டினார். அப்போது செல்வா பயங்கரமாக சிரிக்கத் தொடங்கினார். ”ஏண்டா லூசு மாதிரி சிரிக்கிற?”

“இல்ல மாடுங்களுக்கு பறக்கற சக்தி இருந்தா என்ன ஆகும்னு நினைச்சு பார்த்தேன்.”

----------------------------------------------------------------

 செல்வா ரோட்டில் ஒரு சுவற்றில் ஏதோ எழுதியிருந்ததை படித்தார். அதில் “இதை படிப்பவன் ஒரு கழுதை” என எழுதியிருந்தது. உடனே செல்வா கோபமாக அங்கே எழுதியிருந்ததை கஷ்டப்பட்டு அழித்துவிட்டு எழுதினார்.

“இதை எழுதியவன்தான் கழுதை”

----------------------------------------------------------------


செல்வா ஒரு படத்துக்கு போகத் தீர்மானித்தார். அதற்காக பிடிவாதமாக கஷ்டப்பட்டு அவர் நண்பர்கள் பதினெட்டு பேரை ஒன்று சேர்ந்து அழைத்து போனார். அவர் நண்பர் கேட்டார்.

”ஏண்டா பத்தொன்பது சேர்ந்து போய்தான் அந்த படத்துக்கு போகணும்னு அடம்புடிக்கிற?”

”ஏன்னா அது 18+ படம்”

----------------------------------------------------------------

 செல்வா இறந்து சொர்க்கத்துக்கு சென்றார். அங்கே சொர்க்க வாசலில் தேவதை நின்று கொண்டிருந்தது. “செல்வா நீங்க சொர்க்கத்து போகணும்னா ஏதாவது நல்லது செஞ்சிருக்கனும். இதுவரைக்கும் ஏதாவது நல்லது செஞ்சிருக்கீங்களா” என்றது தேவதை.

உடனே செல்வா சொன்னார், “ஆம் எனக்கு ஞாபகமிருக்கும். ஒரு ஆளில்லாத ரோடு வழியாக நான் பைக்ல போய்கிட்டு இருந்தப்ப தூரத்தில் ஒரு கும்பல் ஒரு பொண்ணை மிரட்டிகிட்டு இருக்கிறதை பார்த்தேன். உடனே அவங்கிட்ட போய் அவளை விடுமாறு சைகை பண்ணேன். ஆனா அவங்க கேட்கலை. நான் அவங்க பக்கத்தில் போய் அவங்க பைக்கை எட்டி உதைச்சிட்டு சொன்னேன்.”
 “அவளை விட்ருங்க. இல்லன்னா எனக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும்.”

தேவதை சுவாரசியமாக கேட்டது, “இது எப்ப நடந்தது?”

“இப்பத்தான் இரண்டு நிமிஷம் முன்னாடி.”

நீதி: நீதியா.. நீதி வேணும்னா நீதிமன்றத்துக்கு போங்க!சிரிம்மா கண்ணு..சிரி..சிரி!

பின் குறிப்பு: இதெல்லாம் உண்மைன்னு நம்பிடாதீங்க. செல்வா இதவிட அறிவாளி .. ஹி ஹி

இப்பட்டிய்லில் நீங்களும் இடம்பெற உடனே விரைந்தோடி செல்வா மொக்கையை படியுங்கள்!

Monday, February 7, 2011

ஹிப்ரு புயல் தேவா பயோடேட்டா







பெயர்:     தேவா


இயற்பெயர்;   தேவேந்திரன் (அப்பு)




தலைவர்:  அப்படி ஒன்றும் இல்லை.. குடும்பத்திற்கு மட்டும் தலைவர்


துணை தலைவர்:  மனைவி, மகள்


மேலும்
துணைத் தலைவர்கள்:  லேப்டாப்,


வயது :  எப்போதும் 30


தொழில் :  எப்போதும் செய்து கொண்டு இருப்பது செயலாளர்


பலம் :  எப்போதும் நல்ல பதிவு போடுவது


பலவீனம் ;   மொக்கை போட தெரியாது


நீண்ட கால சாதனைகள்; தனி ஆளாய் தேடி கொண்டே இருப்பது


சமீபத்திய சாதனைகள் :   200 அடித்தது


நீண்ட கால எரிச்சல் :  புக் வைத்து எழுதுபவர்களை பார்த்தல்...


சமீபத்திய எரிச்சல் ;  நிறைய இருக்கிறது சொல்ல கூடாதவை


மக்கள் :   224 பேர் மட்டும்


சொத்து மதிப்பு :   ஒரு கண்ணாடி...


நண்பர்கள் :   கமெண்ட் ஓட்டு போடுபவர்கள்


எதிரிகள் ;   ஆனானி கமெண்ட் போடுபவர்கள்


ஆசை ;   தினம் ஒரு பதிவு போட வேண்டும்


நிராசை :   1000 பார்வையாளர் வரவேண்டும் என்பது


பாராட்டுக்குரியது :   நல்ல பதிவு போடுவது


பயம் :   கடவுள் மற்றும் குடும்பம்


கோபம் :   பதிவை படித்து விட்டு புரிய வில்லை என்று சொல்பவர்கள் மீது


காணமல் போனவை : அதை தான் தேடி கொண்டு இருக்கிறார்


புதியவை :   எப்போதும் தொடரும் என்று போடுவது


கருத்து :   காதல், கடவுள் , பிரபஞ்சம் , இதை பற்றி



Thursday, February 3, 2011

மொக்கைகள்


முன்குறிப்பு : இன்னிக்கு நீங்க வீட்டுல இருந்து கிளம்புபோது எதாச்சும் கெட்ட சகுனம் வந்துச்சா ?

*.தூங்கும்போது ஏன் கண்ண மூடிட்டே தூங்குறோம்னு தெரியுமா ? கண்ண திறந்திட்டே தூங்கினா நமக்கு வர்ற கனவு எல்லோருக்கும் தெரிஞ்சிடும்ல, அதான்!

*.50000 கொடுத்து பைக் வாங்கினாலும் 50 பைசா கொடுத்து காத்து (AIR )அடிக்கலைனா ஐம்பதாயிரமும் வீண்தான்.பொருளோட விலைய வச்சு அத மதிப்பிடாதீங்க.

*.வெள்ளைப் பூனைக்கும் கருப்புப் பூனைக்கும் என்ன வித்தியாசம்?வெள்ளைப் பூனை வெள்ளைக் கலர்ல இருக்கும் , கருப்பு பூனை கருப்புக் கலர்ல இருக்கும்.

*.கோழி நம்மல கடிக்குமா? அதுக்கு முதல்ல பேசவே தெரியாது , அப்புறம் எப்படி கடி ஜோக் சொல்லும்!?நீதி:கோழிக்கு அறிவு இருக்கா?


*.என்னதான் ஒரு District கோணல் மாணலா இருந்தாலும் , அத தமிழ்ல சொல்லும்போது மா'வட்டம்' அப்படின்னுதான் சொல்லுவாங்க!

*.பள்ளிக்கூடத்துலேயே பிறந்து வளர்ந்தாலும் பல்லிக்கு எழுதப் படிக்கத் தெரியாது;அதுமாதிரிதான் நாம எங்க பிறக்கிறோம்கறது முக்கியம் இல்ல


*.கொம்பு இல்லாத ஆட்ட மொட்டை ஆடு அப்படின்னு சொல்லுறோம் , அப்படின்னா கொம்பு இல்லாத மனுசன மொட்டை மனுசன்னு சொல்லலாமா?


*.உனக்குப் பிடித்ததை மட்டும் தரவே நான், மிகப் பிடித்ததைச் சொல் டீயா காப்பியா? - டீக்கடை நாயர். நீதி : ஒரு டீ விலை 5 ரூபாய்.

*.மீன் செத்தா கருவாடு மட்டும் இல்ல , குழம்பு கூட வைக்கலாம்! உங்களுக்கு கொடுக்கப்பட்ட மீன என்ன பண்ணப்போறீங்கங்கிறது உங்க கைலதான் இருக்கு.!

*.பூமி எவ்ளோ வேகமா எவ்ளோ நேரம் சுத்தினாலும் அது கிறுகிறுப்பு வந்து கீழ விழுந்திடாது! நீதி : பூமி கீழ விழுந்த எங்க போய் விழும்?

*.என் மேல் உனக்கு அப்படி என்ன பாசம் ? எத்துனை முறை திருட்டுத்தனமாக பிறரிடம் அனுப்பினாலும் என்னிடமே வருகிறாய்! கிழிந்துபோன 5 ரூபாய் நோட்டு!

*.எலிக்கு ஏன் இறக்கை இல்லைன்னு தெரியுமா.? பாவம் அதுக்குத்தான் பறக்கத் தெரியாதே, அதான் வேண்டாம்னு சொல்லிடுச்சு!


*.பேனா முனை கத்தி முனையவிட எவ்ளோ கூர்மையா இருந்தாலும் அத வச்சு ஒரு இளநீர் கூட சீவ முடியாது! நீதி:உங்களுக்குத் தெரியாததா?

*.யானைய விட எறும்பு ஒரு விசயத்துல பெரிசு, அது என்னனு தெரியுமா..? யானைக்கு நாலு கால் , எறும்புக்கு ஆறு கால்.!


*.நிலா ஏன் அமாவாசை அன்னிக்கு வரதில்லைன்னு தெரியுமா.? ஏன்னா இருட்டா இருக்கும்ல , அதனால கண்ணு தெரியாம வரமுடில.!

*.மனோ : ஏன்டா அண்டாக்குள்ள தலைய வச்சு தூங்குற.? செல்வா : நீங்கதானே என்னோட முகம் பால்வடியும் முகம்னு சொன்னீங்க.!


*.நிலா ஏன் வெள்ளையா இருக்குனு தெரியுமா .? ஏன்னா அதுதான் வெயில்ல அதிக நேரம் அலையுரதில்லையே.!

*.வாத்தியார் பெருசா கோழி பெருசா..? கோழிதான் பெருசு.! ஏன்னா கோழி போடுற முட்டைல ஆம்லேட் போடலாம் வாத்தியார் போடுற முட்டைல போட முடியாது.!


*.திருடர் தலை மறைவு அப்படின்னு சொல்லுராங்கள்ள , அப்படின்னா அவுங்க தலைய எடுத்து எதாவது எடத்துல ஒளிச்சு வச்சிருவாங்களா ..?

*.எலிமருந்து வச்சா எலி செத்திடுது , பூச்சி மருந்து வச்சா பூச்சி செத்திடுது , அப்படின்னா வெடி மருந்து வச்சா வெடி செத்திடுமா .?

*.எலிமருந்து வச்சிட்டு அந்த காகித்துமேல விஷம் அப்படின்னு எழுதினா கூட எலி அத தின்னுட்டு செத்திருதே ஏன்.? ஏன்னா அது தற்கொலை பண்ணிக்கிது.!

*.பாம்பின் கால் (call) பாம்பறியும் அப்படின்னு சொல்லுறாங்க ., அப்படினா நாம கால் (call) பண்ணினா அதுக்கு தெரியாதா.?

நீதி : இத படிச்சிட்டு எதாச்சும் திட்டணும்னு தோணுதுங்களா ? ஹி ஹி ..