Showing posts with label இலக்கியம். Show all posts
Showing posts with label இலக்கியம். Show all posts

Wednesday, September 27, 2017

கே டிவியில் பார்த்த படங்களின் விமர்சனத் தொகுப்பு - ஒரு இலக்கியப் பார்வை.

வழக்கமாக விமானப் பயணங்களில் நான் புத்தகங்கள் எதுவும் படிப்பதில்லை. இரண்டு நாட்களுக்குத் தொடரும் பெரும் பயணங்களிலுமே நான் இதைத்தான் கடைப்பிடிக்கிறேன். சமீபத்திய டப்ளின் இலக்கியப் பயணத்தின்போது கனெக்டிங் ஃப்ளைட்டிற்காக ஃப்ராங்க்ப்ரூட் விமான நிலையத்தில் ஒன்னரை மணி நேரங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. பொதுவாக கனெக்டிங் ஃப்ளைட்டிற்குக் காத்திருக்கும் சமயங்களில் விமான நிலையங்களில் இருக்கும் அழகிய இளம் மங்கையர்களைக் காண்பதற்கே நேரம் போதாக் குறையாக இருக்கும். அதனால் விமானநிலையத்தில் இருக்கும் முனியாண்டி விலாசிற்கோ, அன்னாச்சி கடைகளுக்கோ சென்று நேரத்தைப் போக்குவதில் விருப்பம் கிடையாது.

கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களாகக் கடைப்பிடித்து வரும் இந்தப் பழக்கம்,வழக்கமாக மாறியே பத்துவருடங்களைத் தாண்டிவிட்டது. ஆனால், இந்த முறை வழக்கத்திற்கும் மாறாக ஃப்ராங்க்ப்ரூட் விமானநிலையத்தில் இருக்கும் virgin புத்தகக் கடைக்குச் சென்று வெறுமனே உலாவிக்கொண்டிருந்தேன். உண்மையில் புத்தகங்கள் எதுவும் வாங்கும் உத்தேசத்தில் அல்ல. நான் சென்னையில் இருந்து பயணித்த லுஃப்தான்சா விமானத்தில் என் சீட்டிற்கு இரண்டு இருக்கைகள் தள்ளி அமர்ந்திருந்த அந்த அம்மணி என்னை வெகுவாகக் கவர்ந்திருந்தார். அவரும் ஃப்ராங்க்ப்ரூட் விமானநிலையத்தில் ஏதோ ஒரு கனெக்டிங் ஃப்ளைட்டிற்காகக் காத்திருப்பதாகவே தோன்றியது. அந்த அம்மணியைக் கவனித்துக் கொண்டே இருந்ததில் அவர் அந்தப் புத்தக அங்காடிக்குள் சென்றதால் நானும் அவருக்குத் தெரியாமல் அவரைத் தொடர்ந்து புத்தக அங்காடியில் என் வருகையைப் பதிவு செய்தேன். அப்பொழுதுதான் எதேச்சையாக இந்தப் புத்தகத்தைப் பார்க்க நேர்ந்தது.


நான் பின் தொடர்வதை அந்த அம்மணி எங்கேயோ கண்டுகொண்டதாகத் தோன்றியதால் நானும் புத்தகம் வாங்கத்தான் வந்தேன் என்பதை நிரூபிக்கும் பொருட்டாக அங்கே பெஸ்ட் செல்லர் புத்தக வகையில் இருந்த ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டேன். விமானத்தில் செல்லும் காலத்தில் அதைப் படிக்கும் எண்ணம் எல்லாம் அறவே இல்லை என்பதுதான் அப்போதைய மனநிலை. ஆனால், அந்தப் புத்தகம் என் வாழ்க்கையின் மறக்கவே முடியாத, என் சிந்தனைத் தளத்தில் மாபெரும் மாற்றத்தை உண்டாக்கும் படைப்பாக இருக்கும் என்று நான் நினைத்திருக்கவில்லை.

பில்லிங் செக்சனில் இருந்து திரும்புகையில் அந்த அம்மணி என் பார்வையில் இருந்து தப்பித்திருந்தார். இனி என்ன செய்வது என்று தெரியாமல் நேரத்தைப் பார்த்தபோது இன்னும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நான் காத்திருக்க வேண்டியிருக்கும் என்று தெரிந்தது. அழகான இளம் அம்மணியின் ஏளனப் பார்வைக்காக வாங்கிய அந்தப் புத்தகத்தை வெறிக்கப் பார்த்துக் கொண்டு அதன் அட்டைப் படத்தினையும், அதன் எழுத்தாளர் யார் என்பதையும் பார்த்தேன். பார்த்த மறுகணமே அந்த அம்மணியைத் தவறவிட்ட சோகமெல்லாம் எங்கோ மறைந்துபோனதாகத் தோன்றியது. ஆமாம். அது ஒரு தமிழக எழுத்தாளர் எழுதிய புத்தகம். தமிழில் எழுதப்பட்டு, ஆங்கிலத்திற்கு மொழிமாற்றம் செய்யப்பட்டிருந்த அந்தப் புத்தகம், இங்கே ஜெர்மனியின் பெஸ்ட் செல்லர் லிஸ்ட்டிலா என்று ஆச்சர்யமும் குழப்பமும் அடைந்தேன்.

எனது இந்த டப்ளின் பயணமுமே கூட ஒரு திட்டமிடப்படாத இலக்கியப் பயணம்தான். உலக அளவில் புனைகதையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் குறித்தான ஒரு கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தேன். என் பயணத்தின் நோக்கமே புனைவிலக்கியம் குறித்தான என் புரிதல்களை அங்கே கூடவிருக்கும் உலக இலக்கிய மேதைகளுடன் விவாதம் செய்வதுதான்.

ஆனால், என் கையில் இருக்கும் இந்தப் புத்தகம் பன்னிக்குட்டி ராம்சாமி எழுதிய கே-டிவியில் பார்த்த படங்களின் விமர்சனம் என்கிற விமர்சனப் புத்தகம். என் பயணத்திற்கும், நான் கலந்துகொள்ளும் கருத்தரங்கிற்கும் இது எவ்வகையிலும் பயன்படப்போவதில்லை என்று தெரிந்திருந்தாலும் ஒரு தமிழ் எழுத்தாளரின் புத்தகம் எப்படி ஜெர்மனியின் பெஸ்ட் செல்லரில் என்கிற ஆவல் உந்தித்தள்ள ஒவ்வொரு பக்கங்களாகப் புரட்ட ஆரம்பித்தேன்.

கிட்டத்தட்ட நான்கு மணி நேரங்கள் ஃப்ராங்க்ப்ரூட் விமானநிலையத்தில், ஒரே இடத்தில் அமர்ந்து மொத்தப் புத்தகத்தையும் வாசித்து முடித்தேன். அத்தனை விறுவிறுப்பான எழுத்துநடை. என் இலக்கிய வாழ்வில் என்னை இந்த அளவு புரட்டிப்போட்ட ஒரு நூல் இன்னும் வெளியாகவே இல்லை.

தமிழ் திரையுலகின் மிக முக்கியப் படங்களை கே-டிவியில் பார்த்து ரசித்திருக்கிறார் பன்னிக்குட்டி ராம்சாமி. ரசித்தது மட்டுமல்லாமல் தான் ரசித்ததை, உலகில் மனிதனாகப் பிறந்த ஒவ்வொரு உயிரும் ருசிக்க வேண்டுமென ஒவ்வொரு படத்தினைப் பற்றியும் திறம்பட விமர்சனமும் எழுதி, அதனை நூலாகவும் வெளியிட்டிருக்கிறார்.

திரைப்படங்கள் குறித்தான விமர்சனங்கள் பெரும்பாலும் அவற்றைப் பற்றின தவறான அபிப்பிராய பிம்பத்தை உருவாக்கும் தொனியிலேயே இன்றைய நவீன இணைய காணொளி விமர்சனங்கள் வெளியாகிவரும் இந்த வேளையில் பன்னிக்குட்டி ராம்சாமியின் இந்தப் புத்தகம் திரை விமர்சனங்கள் குறித்தான பார்வையின் கோணத்தினை முற்றாக மாற்ற வல்லது. இணைய ஊடகங்கள் நிகழ்த்திவரும் விமர்சனப் படுகொலைகளில் இருந்து தமிழ்த் திரையுலகினைக் காப்பாற்றக் கூடிய ஒரே வெளிச்சச் சூரியனாக பன்னிக்குட்டி ராம்சாமியின் இந்தப் படைப்பினைச் சொல்லலாம்.

புத்தகத்தின் முன்னட்டையில் இருந்து பின்னட்டைக்குப் பயணித்து முடிக்கும் வேளையில் தமிழ்த் திரையுலகின் நூற்றாண்டுகாலச் சாதனைகளை வெகு இயல்பாகவும், எளிமையாகவும் தேர்ந்த வாசகனால் கண்டடையவும், அசை போடவும் முடியும். தமிழ்த் திரைப்படங்களின் பெருமையைப் பேசும் இந்தப் புத்தகத்தில் அதே திரைப்படங்களின் அசட்டுத் தனமான காட்சிகளைப் பற்றிய கடும் விமர்சனங்களையும் வைத்திருப்பது கவனிக்கத்தக்கது.

காதல் காட்சிகளையும், காதல் காட்சிகளின் கனவுகளில் வரும் பாடல்களில் நாயகனும் நாயகியும் நான்கைந்து நபர்கள் சூழ நடனமாடிக் காதல் புரிவதையும் கடுமையாகச் சாடும் எழுத்தாளர், எந்த ஊரிலாவது நான்கைந்து நபர்கள் நம்மைக் குறுகுறுவெனப் பார்க்கும்போது காதல் வருமா என்கிற தர்க்க நியாயத்தையும் கூறி அந்தக் காட்சிகளின் அபத்தத்தைக் கிண்டல் செய்கிறார்.

டப்ளின் இலக்கியக் கருத்தரங்கில் இந்தப் புத்தகத்தினைக் கையில் வைத்துக் கொண்டேதான் மேடை ஏறினேன். அயர்லாந்திலும் இந்தப் புத்தகத்தின் ஐரிஷ் வெர்சன் பெஸ்ட் செல்லர் வரிசையில் இருப்பதாக கருத்தரங்கத்திற்கு வந்திருந்த பெரும்பாலான இலக்கியவாதிகள் கூறினார்கள்.

கருத்தரங்கத்திற்கு வந்திருந்த என் இஸ்ரேலிய நண்பன் அந்தப் புத்தகத்தினைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான். இஸ்ரேலிய உளவுப்படையான மொசாத்தில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் அவன் இந்தப் புத்தகத்தில் இருந்த பெரும்பாலான திரைப்படங்களின் திரைச்சொட்டுகளைப் பார்த்து கண்கள் விரிய ஆச்சர்யத்தில் மூழ்கிக் கொண்டே இருந்தான். அவைகள் என்னவென்று அந்த நண்பனிடம் விளக்கியதும் தான் மொசாத்தில் பணிபுரிய லாயக்கற்றவன் என்று கூறிக் கேவிக் கேவி அழ ஆரம்பித்துவிட்டான்.

அவன் சொன்னது இதுதான். மொசாத்தில் உளவாளியாகத் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு இறுதிக் கட்டச் சோதனையாக சகிப்புத் தன்மையைக் குறித்த சோதனை வைக்கப்படுமாம். அதில் தேறினால்தான் மொசாத்தில் பணி. தனது இறுதிச் சோதனையின்போது அந்தப் புத்தகத்தில் இருந்த தமிழ்ப் படங்கள் பலவற்றைப் போட்டுக் காட்டினார்களாம். அவனுடன் இறுதிச் சுற்றுக்குத் தகுதியான சுமார் எண்பத்து நான்கு பேர் பாதிப் படத்திற்கும் மேலாகப் பார்க்கச் சகிக்காமல் கதவைப் பிய்த்துக் கொண்டு ஓடிவிட்டார்களாம். இவனும் இன்னொரு நண்பனும் மட்டும்தான் தேர்வானார்களாம். அவர்களுமே கடைசியாகப் போட்ட படத்தினைப் பார்க்க முடியாமல் பாதியிலேயே ஓடி வந்துவிட்டதாகவும் கூறினான். இத்தனை கொடூரமான, சகிக்கவே முடியாத காதல் காட்சிகளைக் கொண்ட திரைப்படங்களை குடும்பமாக உட்கார்ந்து வேடிக்கை பார்க்கும் திறன் கொண்ட மக்களுடன் ஒப்பிடுகையில் தான் மிகவும் மோசமான திறனுடையவன் என்றும், அதனால் தான் அந்த வேலையில் இருப்பதற்கே லாயக்கற்றவன் என்றும் அழ ஆரம்பித்துவிட்டான். அதுமட்டுமில்லாமல், ஒவ்வொரு படத்தினையும் அது முடியும் வரையிலும் பார்த்து,அதனைக் குறித்து விமர்சனம் எழுதியிருக்கும் இந்த எழுத்தாளர் வாழும் கடவுளாகத்தான் இருப்பார் என்றும் அவர் பிறந்த மண்ணில் இருந்து வந்திருக்கும் நானும் கடவுளின் தூதுவன்தான் என்றும், என்னுடன் பழகக் கிடைத்த வாய்ப்பு இந்தப் பிறவியின் பெரும் பயன் என்றும் தளுதளுக்க ஆரம்பித்துவிட்டான். எனக்கு அவன் பிடியில் இருந்து தப்பி வருவது பெரும் பாடாகிப்போனது.

தமிழில் புத்தகங்கள் வாசிப்பதை நிறுத்தி கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கும் மேலாகிப் போனது. பன்னிக்குட்டி ராம்சாமியின் இந்தப் புத்தகத்தினை நான் ஆங்கிலத்தில்தான் வாசித்தேன். தமிழிலும் வெளியாகி இருக்குமா என்று தெரியவில்லை. தமிழில் புத்தகம் வாசிக்கும் நண்பர்கள் இது குறித்து விசாரித்துப் பார்க்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கிறேன். தமிழில் வெளியாகி இருக்காதபட்சத்தில் இதனை உடனடியாகத் தமிழில் மொழிபெயர்க்க வேண்டியது தலையாய கடமை.

தமிழ் திரையுலகில் தனது காலடித் தடத்தினை நினைவுச் சின்னமாக்கியவர்கள் தொடங்கி, தற்பொழுதுதான் காலடி எடுத்து வைத்திருக்கும் புதியவர்கள் வரையில் எல்லோர் கையிலும் இருக்க வேண்டிய முக்கியமான புத்தகமாகவே பன்னிக்குட்டி ராம்சாமியின் கே-டிவியில் பார்த்த படங்களின் விமர்சனத் தொகுப்பினைப் பார்க்கிறேன்.

Wednesday, February 3, 2016

சமகால திரைவிமர்சனப் படைப்பிலக்கியங்கள - ஒரு பார்வை!

அன்பின் ப.ரா,

இரண்டு நாட்களுக்கும் முன்பாக நானும் என் அறைத் தோழனும் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஒன்றினைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அப்பொழுது அந்தப் படத்தைப் பற்றி நமது இணைய சமூகம் என்ன நினைக்கிறது என்றறிவதற்காக இணையத்தில் உலாவிக் கொண்டிருந்தேன். அப்பொழுது அந்தப் படத்தினைப் பற்றிய இலக்கியத் தரத்திலான விமர்சனக் கட்டுரை ஒன்றினைக் காண நேர்ந்தது. அதில் இருந்தவை நிச்சயமாகத் தமிழ் எழுத்துக்கள்தான். ஆனால், சேர்த்துப் படிக்கையில் அது வேறொரு மொழியாகத் தெரிந்தது. என் நண்பனிடம் கொடுத்து அதனைப் படிக்கச் சொன்னேன். நீண்ட நேரம் அதைப் படித்தான். தமிழ் வழிக் கல்வி கற்றவன்தான்.

முதலில் அவன் நேராகவும், செல்ஃபோனை நேராகவும் பிடித்துப் படித்தான். பின்னர் செல்ஃபோனைத் தலைகீழாகப் பிடித்துக் கொண்டு கொஞ்ச நேரம் படித்தான். அதன் பின்னர் செல்ஃபோனை என் கையில் கொடுத்துவிட்டு, அங்கிருந்த இருக்கையில் அப்படியே தலைகீழாக நின்று கொண்டு படித்தான். மறுபடி செல்ஃபோனைத் தலைகீழாகப் பிடிக்கும்படிக் கூறிக்கொண்டு மறுபடியும் படித்தான். கடைசியில் அந்தப் படம் முடிந்துவிட்டது. இவன் இன்னமும் விமர்சனத்தைப் படித்து முடிக்கவில்லை. 

இப்பொழுதெல்லாம் நள்ளிரவில் திடீரென எழுந்து விழுமியங்கள், எச்சங்கள், கோட்பாடுகள், நுண் கருத்துத் திணிப்புக்கள், அல்லலுறும் மனது, மனப்பகிர்த் துளிகளின் பிம்பங்கள் என்றெல்லாம் பேச ஆரம்பித்துவிடுகிறான். திரைப்படங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை விடவும் அதைக் குறித்த இலக்கிய விமர்சனங்கள் இந்தளவு தாக்கத்தை ஏற்படுத்துமா என்று பிரமிப்பாக இருக்கிறது.

தமிழின் மிக முக்கியமான ஆளுமையான தாங்கள், திரைப்படம் குறித்த இலக்கிய விமர்சனங்களின் தாக்கம் குறித்து என்ன நினைக்கிறீர்கள். சுய உணர்வு நிலையில்லாத தமிழ்ச் சமூகத்தில் இது போன்ற உன்னதமான விமர்சனங்கள் உள்ளிழுத்துக் கொள்ளப்படும் என்று கருதுகிறீர்களா?  
இப்படிக்கு
Selvakumar Palanisamy


அன்பின் செல்வா,

படத்தை பார்த்துவிட்டு விமர்சனத்தை படிக்க முயற்சி செய்திருக்கிறீர்கள். விமர்சனத்தை படிக்கும் முன் படத்தை பார்ப்பது என்பது கக்கா போகும் முன் கழுவுவதை போன்றது. தவறேதும் இல்லையென்றாலும் சரி என்று சொல்ல முடியாது அல்லவா? அது இருக்கட்டும், விமர்சனத்திற்கு வருவோம். இலக்கியத் தரத்திலான விமர்சனம் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். அது இலக்கியத்தரம் என்று முன்பே தாங்கள் அறிந்திருப்பது மிக்க மகிழ்ச்சி. ஆனால் தமிழில் இலக்கியம் என்று வந்துவிட்டால் அதை வாசிப்பதற்கு முன்னர்  சில விஷயங்களை உள்வாங்கி விளங்கிக் கொள்ள வேண்டும். 


தற்கால தமிழ் இலக்கிய சூழலில் பல்வேறு ஞானமரபுகள் தோன்றி வளர்த்தெடுக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொன்றும் தமக்கென தனித்தன்மையான எச்சங்களை விரவி வைத்துக் கொண்டிருக்கின்றன. அவற்றின் கோட்பாடுகள் பெரும்பாலும் தொன்மையான விழுமியங்களில் இருந்து கடனாக பெறப்பட்டவையே. அங்கே காணப்படும் நுண்ணரசியல், பல நேரங்களில் ஞானமரபுகளை உடைத்தெறிவதாக இருந்த போதும், ஆழமான படிமங்கள் ஊடான கருத்து திணிப்புகள் ஏற்படுத்தி வரும் பிம்பங்கள் இந்த கட்டமைப்புகளைத் தக்க வைக்கும் வேலையை இடையறாது செய்து வருகின்றன. இவற்றை அறிந்திருந்தால் மட்டுமே தமிழ் இலக்கிய கட்டுரைகளை வாசிக்க முடியும். தெரியாமல் வாசித்து விட்டீர்கள் என்றால் அது இலக்கிய கட்டுரையே அல்ல என்று அறிக. ஆகவே நீங்கள் உடனடியாக ஏதாவது ஒரு இலக்கிய ஞானமரபை தெரிவு செய்து, ஆசான் ஒருவரை பிம்பமாக ஏற்றுக்கொள்ள முயல வேண்டும்.  

நிற்க. இப்போது உங்கள் நண்பரின் பிரச்சனைக்கு வருவோம். செல்போனை தலைகீழாக வைத்தும், தானே தலைகீழாக நின்றும் படிக்க முயற்சித்ததாக கூறி இருக்கிறீர்கள். அதுதான் நீங்கள் இருவரும் செய்த இமாலய தவறு. இலக்கியம் வளர்ப்பதற்கென்றே அரசு ஆங்காங்கே கடைகள் கட்டி சில நீர்மங்களை வினியோகம் செய்து வருவதை அறியாமல் நீங்கள் தமிழராக இருக்கவே வாய்ப்பில்லை. இலக்கிய விமர்சனம் படிக்க வேண்டும் என்று முடிவு செய்த மறுகணமே நீங்கள் அந்த கடைகளுக்கு விஜயம் செய்திருக்க வேண்டும். அங்கே அதைவிட இலக்கியத்தரம் மிக்க விமர்சனங்கள் வாயால் எழுதப்படுவதை செவிகுளிர பார்த்திருக்கலாம். தலைகீழாக, ஒருக்களித்தவாறு, கோணலாக, நேராக என்று அனைத்து தளங்களிலும் ஒரே நேரத்தில் இலக்கியம் வாசித்த அனுபவம் உடனடியாகக் கிடைத்திருக்கும். 

இது எதையும் செய்யாமல் நேரடியாக ஒரு இலக்கிய விமர்சனத்தை படிக்க வைத்து உங்கள் நண்பரை சுய மனமுரண்டு நிலையை அடைய வைத்திருக்கிறீர்கள். அவரை சரி செய்ய இப்போது ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. நள்ளிரவில் எழுந்து அவர் கூச்சலிடும் போது, ’தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி’ என்று சத்தமாக அவர் காதில் கத்தவும். ஆரம்பநிலை என்றால் உடனே சரியாகி விடுவார். அப்படியும் அடங்கவில்லை என்றால் ’சாட்டையடி பதிவு தோழர்’ என்று கத்தவும். இதற்கும் அடங்காத முற்றிய நிலை என்றால் அதற்கு இன்னொரு வழி இருக்கிறது.  ’சார் பத்மபூசன் வேணுமா’ என்று காதில் மிக மெதுவாக ரகசியம் பேசுவது போன்ற தொனியில் கேக்கவும்.... அடங்கியே தீருவார்!

திரைப்படங்களுக்கு எழுதப்படும் இலக்கியத்தரமான விமர்சனங்கள் குறித்து எமக்கு எப்பொழுதும் ஆழ்ந்த கவலை உண்டு. தமிழ்ப்படங்களே இலக்கியத்தின் உச்சகட்டம் எனும்போது அதை இலக்கியத் தரமாக விமர்சிக்கிறேன் என்பதே மிகப்பெரும் முரண்நகையாகும். இத்தகைய விமர்சனங்களில் காணப்படும் மிகைப்புகழ்ச்சிகள், குதர்க்க வாதங்கள், அதீத சொல்லாடல்கள், எள்ளல்கள் அனைத்தும் நம் விஜய் அண்ணாவின் ஓப்பனிங் சாங்கில் அவர் பார்க்கும் ஒரே ஒரு ஓரப் பார்வைக்கு அருகில் கூட வர இயலாது என்பதே எம் தெளிவு...!


இப்படிக்கு

பன்னிக்குட்டி ராம்சாமி

Thursday, December 31, 2015

கந்தரகோலம் : எதிர்பார்ப்பும் ஏமாற்றங்களும்.

கிட்டத்தட்ட அழிந்துபோகும் நிலையிலிருக்கும் தமிழ் இலக்கியத்தினை உய்விக்க வந்த ரட்சகனாகவே ஆளுமை நாகராஜசோழனைப் பார்க்கிறது தமிழ் இலக்கியச் சமூகம். தமிழ் இலக்கிய வளர்ச்சியிலும், செழிப்பிலும் கவனம் செலுத்தும் எல்லோருக்குமே ஆளுமை நாசோ ரட்சகன்தான்.

ஆளுமையின் கந்தரகோலம் அறிவிக்கப்பட்டுக் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையில் இன்னமும் அது வாசகவெளியை எட்டிப் பிடிக்கவில்லை. எழுத்துச் சுதந்திரம் குறித்தோ, பேச்சுச் சுதந்திரம் குறித்தோ பேச இது நயமான சூழல் இல்லையென்றாலும் தமிழ் இலக்கியத்தினை அழிவிலிருந்து மீட்டெடுக்கும் ஒரு படைப்பினைக் குறித்து அறிந்து கொள்வதிலும் கூட ஆர்வம் இல்லாத அளவிற்கா ஒரு சமூகம் அறிவிழந்துகிடக்கும்? நினைத்துப் பார்க்கவே வெட்கமாக இருக்கிறது. இப்படியான ஒரு சமூகச் சூழலில் சிக்கிக் கொண்ட நாசோவைப் போன்ற எழுத்தாளர்களின் கதிதான் என்ன? கந்தரகோலம் எப்பொழுதுதான் வெளியாகும்? கந்தரகோலத்தினை வெளியிட இந்தச் சமூகம் எள்ளளவேனும் துணையாக இருக்குமா? 

கடந்த ஆண்டிலேயே வெளியாகும் என்று கந்தரகோல வெறியர்களால் எதிர்பார்க்கப்பட்ட ஆளுமையின் கந்தரகோலம் மேலும் ஓராண்டினைக் கடந்து மறுபடியும் ஏமாற்றத்தினை மட்டுமே பரிசளித்திருக்கிறது. இதைக் குறித்து யாரைக் குறை சொல்வது? கந்தரகோலத்தினை வெளியிடக் கடும் எதிர்ப்புக்களைத் தான் சந்தித்துவருவதாக முன்பே அறிவித்திருந்தார் ஆளுமை நாசோ. ஒரு எழுத்தாளன் வேறு என்னதான் செய்யமுடியும்?


கந்தரகோல பக்தர்கள் குழுமத்தில் இது குறித்து நான்கைந்து வருடங்களாகப் பேசிவருகிறோம். கந்தரகோலத்தினை மக்கள் திரளுக்குக் கொண்டு செல்வதில் இருக்கும் தடைகள் என்னென்ன என்பது குறித்து அதிகாலை பத்து மணிக்கு அலுவலகம் வந்ததிலிருந்து பேச ஆரம்பித்துவிடுவோம். கிட்டத்தட்ட நள்ளிரவு ஏழு மணி வரையிலும் கூட கடுமையாக விவாதிப்போம். அதன்பின்னர் அலுவலக உதவியாளர் வந்து ஆஃபீசைப் பூட்டப்போவதாக அறிவித்துவிடுவார். பின்னர் வீட்டிற்கு வந்து தொடர்ந்து விவாதிப்போம். சில நாட்களில் கடும் நள்ளிரவு பத்து மணி வரையிலும் கூட விவாதித்திருக்கிறோம். பின்னர் தூக்கம் வந்துவிடும்.

இப்படியாக கந்தரகோலத்தின் தடையரணை உடைத்தெறிய நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் முயன்று தோற்றுவருகிறோம். கந்தரகோலம் பக்தர்கள் குழுமம் என்றில்லை, பொதுவாக தமிழ் வாசிக்கத் தெரிந்த எல்லோருமே கந்தரகோலத்தினை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் என்பதில் சந்தேகம் கொள்ள எதுவுமில்லை. 

எங்களின் எதிர்பார்ப்பும், ஏமாற்றமும் தீரும் நாள் எப்பொழுது என்று ஆளுமையிடம் சமீபமாகக் கேட்டிருந்தேன். அதற்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு.


அன்பின் செல்வா,

கந்தரகோலத்தை வெளியிடுவதில் ஏற்பட்டுவரும் மறைமுக எதிர்ப்புக்கள் என்னவென்று சமீபத்தில் என் நண்பரும், சக இலக்கியவாதியுமான திருவள்ளுவர் கேட்டிருந்தார். ஒருவேளை கந்தரகோலம் புத்தகத்தினை இன்னமும் தாங்கள் எழுதாததுதான் அந்த மறைமுகத் தடையா என்றும் வினவியிருந்தார்.

நான் திருக்குறள் சொல்லும் திசையில் பயணிப்பவன். இந்த வாழ்க்கையில் வெற்றி தோல்விகளைப் பற்றிக் கவனம் கொள்ளாதவன். என் வாழ்க்கையில் எப்பொழுது திருக்குறள் நுழைந்ததோ அப்பொழுதிலிருந்தே எனக்குத் திருக்குறள்தான் உயிர்மூச்சு. 

திருக்குறள் சொல்லும் பாதையில் பயணிப்பது இந்த நவீன காலத்திற்கு உகந்ததா என்றால் சற்றே கடினம்தான். நான் எப்படி அச்சுப் பிசகாமல் திருக்குறள் சொல்லும் திசையில் பயணிக்கிறேன்.? எப்படி என்னால் இது சாத்தியமாகிறது? விளக்குகிறேன்.

நான்கைந்து வருடங்களுக்கும் முன்பாக கொஞ்சம் பெரிய சைசில் எனக்குத் திருக்குறள் புத்தகத்தினை நண்பன் ஒருவன் பரிசளித்திருந்தான். அதில் ஏதோ ஒரு நூலகத்தின் பெயர் எழுதப்பட்டிருந்தது. அதைப் பார்த்ததுமே திடுக்கிட்டுப் போய் “திருடின புக்கா இருந்தா எனக்கு வேண்டாம்” என்று திருப்பிக் கொடுத்துவிட்டேன். அதற்கு அவன் “ திருடினது இல்ல, டைம் முடிஞ்சு போச்சு, கொண்டுபோய் குடுக்கல” என்றான். திருடியதாக இல்லாவிட்டால் ஒன்றும் பிரச்சினையில்லை என்று வாங்கிவைத்துக் கொண்டேன்.

அந்தப் புத்தகத்தின் முன்னுரையில் திருக்குறள் காட்டும் திசையில் பயணிக்கும் ஒருவனின் வாழ்க்கை பயனுள்ள வாழ்க்கையாகிறது என்று எழுதப்பட்டிருந்தது. அன்றே நானும் திருக்குறள் காட்டும் பாதையில் பயணிப்பதென்று முடிவெடுத்தேன்.

தினமும் எங்கேனும் வீட்டிலிருந்து வெளியே போக வேண்டிய சூழல் வருமானால் உடனடியாக திருக்குறள் புத்தகத்தினை எடுத்து ஒரு சுழற்றுச் சுழற்றுவேன். அது எந்தத் திசையைக் காட்டுகிறதோ அந்தத் திசையில் சுவற்றில் ஓட்டை போடுவேன். பின்னர் அந்த ஓட்டையின் வழியாக வெளியேறுவேன். இதற்கென்றே திருக்குறள் புத்தகத்தின் மேற்புறமாக அம்புக் குறி ஒன்றினை வரைந்து வைத்திருக்கிறேன். இப்படியாக தினமுமே அது ஒவ்வொரு திசையைக் காட்டும். நானும் தினமும் இப்படி எல்லாத் திசைகளிலுமே சுவற்றினை ஓட்டை போட்டு அங்கெல்லாம் கதவுகளை வைத்திருக்கிறேன். இதற்காகவே ஒரு கொத்தனாரையும் மாதச் சம்பளத்திற்கு வைத்திருக்கிறேன். திருக்குறள் காட்டும் திசையில் பயணிப்பது அலாதியானது. ஒவ்வொரு நாளுமே நான் புறப்படுகிற நேரத்திற்குச் சற்று முன்பாகவே புத்தகத்தைச் சுழற்றுவேன். அது காட்டும் திசையில் கதவிருந்தால் பிரச்சினையில்லை. இல்லாவிட்டால் கொத்தனாரிடம் சொல்லி சுவற்றை உடைத்து வெளியேறுவேன்.

இப்படியாக திருக்குறள் காட்டும் திசையில் பயணித்து வருகிறேன். இதைப் பற்றி ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தபோது அவரும் திருக்குறள் காட்டும் திசையில் பயணிப்பதாகத் தெரிவித்தார். எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இத்தனைக்கும் அவர் வாடகை வீட்டில் இருக்கிறாராம். வாடகை வீட்டில் இதையெல்லாம் எப்படி ஒத்துக்கொள்கிறாகள் என்று ஆர்வத்தில் கேட்டபோது அவர் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று எப்படியென்று விளக்கினார்.

அவரிடமும் ஒரு திருக்குறள் புத்தகம் இருந்தது. அதிலும் ஒரு அம்புக் குறியும் இருந்தது. அவரும் என்னைப் போலவே புத்தகத்தினைச் சுழற்றிவிட்டார். ஆனால், அது வாசலைத் தவிர்த்து வேறொரு திசையைக் காட்டியதும் ஒரு கண்ணாடியை எடுத்துவந்து அந்த அம்புக் குறி வாசலை நோக்கிக் காட்டுமாறு பிடித்துக் கொண்டு, இப்பொழுது கண்ணாடியில் அந்த அம்புக் குறியின் திசையை என்னிடம் காட்டினார். அது வாசல் கதவு இருக்கும் இடத்திற்கு நேராக இருந்தது. இப்படித்தான் தினமும் அவர் திருக்குறள் காட்டும் திசையில் பயணிப்பதாகச் சொன்னார். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. எத்தனை புத்திசாலித்தனமான காரியம் பாருங்கள். எனக்கு ஏன் இது தோன்றவில்லை என்று யோசித்துப் பார்த்தேன்.

அதன்பின்னர் நாங்கள் மேலும் ஒரு நண்பரைச் சந்தித்தோம். அவரிடம் நாங்கள் எப்படித் திருக்குறள் காட்டும் திசையில் பயணிக்கிறோம் என்று சொன்னதும் திடீரென தனது தலையை சுவற்றில் முட்ட ஆரம்பித்தார். எங்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை. என்னவென்று விசாரித்ததில் திருக்குறள் காட்டும் திசையில் பயணிப்பதென்றால் அதுவல்ல என்றும், தான் எப்படி திருக்குறள் காட்டும் திசையில் பயணிக்கிறேன் என்றும் விளக்கமளித்தார்.

அவரிடமும் ஒரு திருக்குறள் புத்தகம் இருந்தது. அவரும் அதைச் சுழற்றிவிட்டார். ஆனால், அதில் எந்தவொரு அம்புக் குறியும் இல்லை. எப்படி இவர் இதைவைத்து திருக்குறள் காட்டும் திசையில் பயணிக்கப் போகிறார் என்று ஆச்சர்யமாக இருந்தது. புத்தகம் சுழன்று நின்றதும் தன் பாக்கெட்டிலிருந்து ஒரு அம்புக்குறியை எடுத்து வாசல் பக்கத்திற்கு நேராக அதன் முனைப்பகுதி இருக்குமாறு புத்தகத்தில் ஒட்டினார். அவ்வளவுதான். இப்பொழுது அவர் சுவரினை ஓட்டை போடவோ அல்லது கண்ணாடியை எடுத்து திருப்பிக் கொண்டிருக்கவோ இல்லை. இது அதைவிடவும் எளிதாக இருந்தது.

இப்படித்தான் ஊருக்குள் நிறைய அறிவாளிகள் திரிகிறார்கள். நம் பார்வை அவர்கள் மேலெல்லாம் விழுவதில்லை. அப்படியான அறிவாளிகள் அதிகரிக்கும் நாளுக்காகத்தான் கந்தரகோலம் புத்தகத்தினை வெளியிடாமல் காத்திருக்கிறேன். அப்படியான அறிவாளிகளின் எண்ணிக்கை கோடியைத் தொடுகின்றபோது கந்தரகோலம் வெளியாகும்.

சரி, மேற்கூறிய கதையினை வெறுமனே படித்துச் சிரித்துவிட்டுச் செல்லும் வாசகர்களுக்கு மத்தியில், நாம் சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் எப்படி திருக்குறள் காட்டும் திசையில் பயணிக்கும் மூன்று மனிதர்களைப் போலப் பின்பற்றுகிறோம் என்று புரிந்துகொள்ளும் வாசகர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள். எண்ணிக்கையில் அவர்கள் குறைவாக இருக்கலாம். அல்லது அவர்கள் பிறக்காமல் இருக்கலாம். அவர்களுக்கான ஆக்கம்தான் கந்தரகோலம். இப்பொழுது வெளியிட்டால் கழுதைகளிடம் கவிதைப் புத்தகத்தைத் தருவதைப் போன்ற கதைதான். அவை அவற்றைத் தின்றுவிடும். ஆனால், சாணம்தான் போடும். அதைப் போல கந்தரகோலம் வீணாகிவிடக் கூடாதென்ற காரணத்தினால்தான் ஒவ்வொரு ஆண்டும் இது தள்ளிப் போடப்படுகிறது. 

புத்தாண்டு வாழ்த்துக்களுடன்
தமிழிலக்கியப் பேராளுமை நாசோ.


Saturday, November 29, 2014

கந்தரகோலம் என்னும் மாய யதார்த்தம்

காலையில் டியூஸ்லேண்ட்டிலிருந்து (ஜெர்மனி) நண்பன் அழைத்திருந்தான். சுத்த ஜெர்மானியன். தமிழ் தெரியாது. டியூஸ் பர்க் ( University of Duisburg- Essen) பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது நண்பர்களானோம். ஒரே சிந்தனையுடைய மனிதர்கள் ஒரே மொழியினையோ அல்லது இனம், மதம் முதலானவற்றைச் சார்ந்திருக்க வேண்டுமென்று எந்த விதியும் இல்லையென்பது இவனையும் என்னையும் பார்த்தால் புரிந்துவிடும். மறக்கமுடியாத நண்பன். 

என்னுடன் படித்த மற்ற ஜெர்மானியர்களைப் போலல்ல இவன். கம்யூனிசம் பேசுவான். உலக இலக்கியங்களைத் தேடித்தேடிப் படிப்பான். நானும் கூட சாரு மற்றும் எஸ்.ரா ஆகியோரை அறிமுகப்படுத்தியிருக்கிறேன். ஜீரோ டிகிரி நாவலைப் படித்துவிட்டு வாழ்விலே ஒருமுறையேனும் சாருவைப் பார்த்தே தீருவதென்று தீர்மானித்திருப்பதாகக் கூறியிருக்கிறான். தினமும் என்னவெல்லாமோ பேசுவோம். ஜெர்மனியிலிருந்த அந்த இரண்டு வருடங்களை மறக்க முடியாத நாட்களாக மாற்றியவன் இவன் ஒருவனே. இப்பொழுதும் கூட வாரம் ஒருமுறையேனும் தொலைபேசிவிடுவோம். நான் இன்னமும் ஜெர்மன் கற்றுக்கொள்ளவில்லை. போலவே அவனும் தமிழ். ஆங்கிலத்தில்தான் உரையாடல் நடக்கும்.



சரி, காலையில் தொலைபேசிய விசயத்திற்கு வரலாம். கடந்தவாரத்தில் ஆளுமை நாசோவின் கந்தரகோலம் புத்தகம் டச்சு மொழியில் வெளியாகியிருந்தது. வழக்கம்போலவே அவர் தனது ஆங்கிலப் பக்கத்தில் மட்டும் இதனைப் பகிர்ந்திருந்தார். தமிழில் கந்தரகோலம் புத்தகம் விர்ச்சுவல் டுபாக்கூராகப் பார்க்கப்பட்டுவருவது குறித்து அவருக்கு எந்த வருத்தமும் இல்லை. நீங்கள் ஏன் உண்மையைச் சொல்லக்கூடாது என்று பலமுறை அவரிடம் கேட்டிருக்கிறேன். இல்லை, கந்தரகோலம் என்ற புத்தகமே உருவாகவில்லை என்ற மாயத்தோற்றத்தை (இதை மாய யதார்த்தம் எனவும்) உருவாக்குவதற்கு ஒரு காரணம் இருப்பதாகத் தெரிவித்தார். என்ன காரணமென்று எனக்கு இதுவரையிலும் புரியவில்லை. ஆனால், இங்கே தமிழ் வலையுலகில் கந்தரகோலம் புத்தகத்தினைப் பற்றி அனேகம் பேர் இப்படி ஒரு புத்தகமே வராது என்ற நிலையில் அதனைக் கிண்டலடித்து வருகின்றனர். அவர் வழியையே நானும் பின்பற்றி அந்தக் கிண்டல்களை விட்டு விலகிப் போய்விடுவதுண்டு. இப்பொழுது அதல்ல பிரச்சினை. 

ஜெர்மன் மொழியில் வெளியாகியிருக்கும் கந்தரகோலம் புத்தகம் ஜெர்மனியில் பெரும் பரபரப்பினை உருவாக்கிவருவதாகவும், இந்த வார இறுதிக்குள்ளாக ஜெர்மன் பெஸ்ட் செல்லரில் முதல் இடத்தினைப் பிடித்துவிடும் என்று அவன் கூறியிருந்தான். மேலும் தான் முதல் ஆளாக அந்தப் புத்தகத்தினை வாங்கி வாசித்துவிட்டதாகவும், ஆளுமை நாசோவின் புகைப்படம் கிடைக்குமா என்றும் கேட்டிருந்தான். அல்லது அவர் தனக்கு ஒரு "ஹாய்" சொன்னாலும் பிறப்பின் பலனை அடைந்துவிடுவேன் என்றும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தான். என் உயிர் நண்பன்தான். ஆனால், என்னால் அதனை ஏற்பாடு செய்துதரமுடியாது என்று மறுத்துவிட்டேன். 

நான் மறுத்தாலும் அவன் வேறுவிதமாகச் சந்தோசப்பட்டான். அதாவது ஆளுமை நாசோவை நான் ஓரிரு முறைகள் நேரில் பார்த்திருக்கிறேன். ஆளுமையை நேரில் பார்த்த ஒருவன் தனக்கு நண்பனாக இருக்கிறானே என்பது அவனது சந்தோசமாக இருந்தது. எனக்கும் மகிழ்ச்சியே.

அவன் கூறியதில் மிக முக்கியமான செய்தி என்னவென்றால் கந்தரகோலம் புத்தகத்தின் ஆங்கிலப் பதிப்புரிமை மிகப் பெரும் விலைக்கு விற்கப்படவிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் கலை, இலக்கியம் போன்றவற்றில் நுண்மையான பார்வையைக் கொண்டவர்களான பிரான்சு தேசத்தில் கந்தரகோலத்திற்கென தனியொரு நினைவுச் சின்னமும், மணி மண்டபமும் அமைக்கப்படவுள்ளதாகவும், அதன் திறப்புவிழாவிற்கு ஆளுமை அழைக்கப்படவிருப்பதாகவும் கூறினான். மேலும் நோபல், புக்கர் பரிசுகளுக்கு மேலாக கந்தரகோலம் அல்லது ஆளுமையின் பெயரில் விருதுகளை ஏற்பாடு செய்ய உலக நாடுகளை ஐரோப்பிய யூனியன் வலியுறுத்தவுள்ளதாகவும் பேசப்படுகிறது.

ஒரு பெரும் சாதனையைச் செய்துவிட்டு, இன்னமும் கந்தரகோலம் எழுதப்படவில்லை, சிலேவில் வெளியிடவுள்ளேன் என்றெல்லாம் ஒருபக்கம் கிண்டல் நிலைத்தகவல்களையும் பகிர்ந்துகொண்டு, மிகச் சாதாரணனாகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் ஆளுமை நாசோவை என்னவென்பது?

Hüte weg zu Ihnen AALUMAI :))) Dank für hier!

Wednesday, June 25, 2014

கந்தரகோலம் - ஆங்கில மொழிபெயர்ப்பும் பிரச்சினைகளும்!

தமிழ் இலக்கியத்தின் நிகழ்காலச் சூழலை உன்னிப்பாகக் கவனித்து வருபவர்களுக்கு தமிழ் இலக்கியவெளியில் நிகழ்ந்துவரும் அரசியல் மற்றும் பிழைப்புவாதப் போராட்டங்கள் பற்றித் தெளிவாகத் தெரிந்திருக்கும்.

உலகின் மிகத் தொன்மையான மொழியாக இருந்தபோதிலும் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் தமிழ் இலக்கியம் பெரிதாக ஒன்றும் வளர்ந்திருக்கவில்லை. திருவள்ளுவர் ஓரிரு கவிதைகள் எழுதியிருந்தார், அதற்குப் பின் கம்பர் ஏதோ சில பல கவிதைகளை ராமாயணம் என்ற பெயரில் சொல்லி இருந்தார். அதன்பிறகு புதுமைப்பித்தன் வாசிக்கும்படியாக ஏதோ இரண்டு சிறுகதைகள் எழுதியிருந்தார்.  அதன் பின்னர் தமிழ் இலக்கியத்தில் சொல்லிக்கொள்ளும் மாற்றங்கள் ஏதும் நிகழ்ந்திருப்பதாக அறிந்தவர்கள் யாரும் சொல்லிக் கொள்ளமாட்டார்கள்.

“டீச்சர், இவன் என்னைக் கிள்ளிட்டான், மிஸ், என் ரப்பர் வெச்ச பென்சிலைத் திருடிட்டான்” என்ற அளவிலான ஒன்றாம் வகுப்பு மாணவர்களின் வகுப்பறையைப் போலவே காட்சியளிக்கிறது தற்போதைய தமிழ் இலக்கியச் சூழல். இச்சூழலை அடியோடு மாற்றி, தமிழ் இலக்கியவெளியினை ஒன்றாம் வகுப்பிலிருந்து நேரடியாகக் கல்லூரிக்கு மாற்றும் திறத்துடன் தோழர் நாகராஜசோழனால் உருவாக்கப்பட்டிருக்கும் படைப்புத்தான் கந்தரகோலம்.

கடந்த ஆண்டிலேயே முழுவதுமாக எழுதிமுடிக்கப்பட்டிருந்தாலும், இன்னும் தமிழில் இந்நூலை வெளியிடமுடியவில்லை என்பது என் போன்ற வாசகர்கள் மத்தியில் பெரும் வருத்தத்தினை ஏற்படுத்திவருகிறது. ஒன்றுக்கும் உதவாத புத்தகங்களை எல்லாம் வாசகர்கள் சொந்தச் செலவில் வாங்கி வாசித்து, இதுதான் இலக்கியம் என்ற ஒரு தவறான புரிதலிலேயே காலம் தள்ளிக் கொண்டிருக்கும் சூழல் எப்பொழுது மாறுமோ என்ற ஆதங்கத்தில் இருந்தபோதுதான் கந்தரகோலம் புத்தகத்தினை எனக்கு அனுப்பியிருந்தார் நா.சோழன். இலக்கியம் என்பதன் முழு அர்த்தம் எனக்கு அப்பொழுதுதான் புரிந்தது.
ர்
தமிழில் இந்த நூல் வெளியாகும் நாள் தமிழ் இலக்கியம் குறித்த பலவிதமான கட்டுடுடைப்புக்களை ஏற்படுத்தும் என்பது நிதர்சனம். ஆனால், தமிழ் இலக்கியவெளியில் நிகழ்ந்துவரும் அரசியல் காரணங்களால் கந்தரகோலம் சிறுகதைத் தொகுப்பினை வெளியிடுவதில் மறைமுக எதிர்ப்புக்களையும், மிரட்டல்களையும் நாகராஜசோழன் சந்தித்துவருகிறார். பின்னே கந்தரகோலம் வெளியாகிவிட்டால் இலக்கியம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பவர்களின் நிலை என்னாவது?

வாசகர்களை விடவும் எழுத்தாளர்கள் அதிகமுள்ள தமிழ் இலக்கியவெளியில் புத்தகங்களை விற்பதற்கும், விற்றபிறகு அப்புத்தகங்களைப் பற்றிய விமர்சனங்களை எழுதுவதற்கும் தனித்தனியாக யோசிக்கவேண்டியிருப்பது ஒரு எழுத்தாளன் எதிர்கொள்ளக்கூடாத கெட்ட அனுபவங்களில் ஒன்று. நோயாளிகளை விடவும் மருத்துவர்கள் அதிகமாக உள்ள சூழலில் அந்த நோயாளியின் நிலை வருந்தத்தக்கதுதான். பெரும்பாலான இலக்கியவாதிகளும், எழுத்தாளர்களும் இதனை ஒரு சவாலாகவே கருதி தங்களது எழுத்தில் சிற்சில கவர்ச்சி வித்தைகளையும் கைக்கொண்டுவருகின்றனர்.

ஆனால், இதுகுறித்து நாகராஜசோழனின் பார்வை முற்றிலும் மாறானது. அவரது வாதத்தின் படி, ஒரு குரங்கினைச் சுற்றி நூறு மனிதர்கள் இருந்தாலும், ஒரு மனிதனைச் சுற்றி நூறு குரங்குகள் இருந்தாலும் வேடிக்கை காட்டப்போவதென்னவோ குரங்குதான். இதுதான் நாகராஜசோழன் மற்ற எழுத்தாளர்களில் இருந்து மாறுபட்டு நிற்கும் நிலை. இதனாலேயே அவரது படைப்புலகம் மற்ற எழுத்தாளர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு நிற்கிறது.

கந்தரகோலம் கவிதைத் தொகுப்பின் அருமைகளால் கவரப்பட்ட ஆங்கிலேயர்கள் இந்த நூலினை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளதாகச் சமீபமாகக் கேள்விப்பட்டேன். இலக்கிய உலகின் அகப்படிம உணர்ச்சிக் கூறுகளை உள்ளடக்கிய படைப்பான கந்தரகோலம் முதன்முதலில் தமிழில் வெளியாவதுதான் தமிழ் மொழிக்கு நாம் செய்யும் சிறு அளவிலான நன்றியாகவாவது இருக்குமென்றாலும், ஆங்கிலத்திலாவது வெளியாகிறதே என்று நினைத்து மகிழ்ந்துவந்தேன்.

ஆனால், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட கந்தரகோலம் சிறுகதைத் தொகுப்பும் வாசிப்புவெளிக்கு வரமாலேயே முடக்கப்பட்டிப்பருப்பதாகக் கேள்விப்பட்டதிலிருந்து வாசிப்பின் மேலிருந்த அனைத்து கவர்ச்சிகளும் சுக்குநூறாக உடைந்துவிட்டன. நல்ல நூல்களெல்லாம் எங்கோ சல்லடைகளால் வடிக்கப்பட்டு, மோசமான நூல்களை மட்டுமே வாசிக்கவேண்டிய கட்டாயம் தமிழில் மட்டுமல்லாது மற்ற மொழிகளிலும் இருப்பது வருந்தத்தக்கது.

கந்தரகோலம் ஆங்கிலமொழிபெயர்ப்பும் முடக்கப்பட்டிருப்பது குறித்து என் ஒரே ஆதர்ஷ எழுத்தாளரான நாகராஜசோழன் அவர்களுக்கு கடந்த 2114 ஆம் ஆண்டு ஒரு மடல் அனுப்பியிருந்தேன். அதற்கான பதில் நேற்று வந்திருந்தது. அவரது பதில் கீழே...


அன்பின் செல்வா,



வணக்கம். இன்று இதே போன்ற கடிதத்தினைப் பதினைந்தாவது முறையாக வாசிக்கிறேன். இதுவரையிலும் வாசித்த 15 கடிதங்களிலும் ஒரு எழுத்துக்கூட மாற்றமில்லாமல் ஒரே மாதிரியாக இருப்பது கந்தரகோலம் குறித்து வாசகர்களிடையே எழுந்திருக்கும் ஆர்வத்தைக் காட்டுகிறது. பாருங்கள், பதினைந்து கடிதங்களிலும் பெயரும் கூட ஒரே மாதிரியாக இருக்கிறது. இதுகுறித்து என் வாசகர் வட்ட நண்பரிடம் கேட்டிருந்தேன்.


அதற்கு அந்த அன்பர்,  நீங்கதானே நாகா ஒரு நாளைக்கு நூறு கடிதமாவது இருக்கனும்னு சொன்னீங்க, இன்னிக்கு ஒரே கடிதம்தான் வந்திருந்துச்சு, அதான் அத நூறு ஜெராக்ஸ் எடுத்துட்டேன் என்றார். ஏன் இத்தன நாளா இப்படி எதுவும் வரதில்லையே என்றேன். இத்தன நாளா ஒரு கடிதம் கூட வராதுங்க, நானே உக்கார்ந்து எல்லாத்தையும் எழுதுவேன். ஆனா இன்னிக்கு இந்தக் கடிதம் வந்துச்சுங்கிறதால அத ஜெராக்ஸ் எடுத்துக் குடுத்துட்டேன் என்றார்.

தமிழ் இலக்கியச் சூழலில் அறிவுள்ள ஒரு வாசகர் வட்ட நண்பர்கூட எழுத்தாளர்களுக்கு வாய்ப்பதில்லை. இதுபோன்ற ஒரு சூழலில் ஒரு எழுத்தாளன் எப்படி சிறந்த படைப்புக்களைத் தரமுடியும் என்ற கேள்வி அடிக்கடி ஏற்பட்டுவிடுகிறது.

சரி கேள்விக்கு வருகிறேன். கேள்விக்கு நீங்களே வந்திருப்பதால் நான் நேரடியாகப் பதிலுக்கே வந்துவிடுகிறேன்.


கந்தரகோலம் கட்டுரைத்தொகுப்பினை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடவிரும்புவதாக சக இலக்கியவாதியும், ஆங்கில மொழிபெயர்ப்பாளருமான கூகுள் ட்ரேன்ஸ்லேட்டர் என்னிடம் கோரியிருந்தார். தமிழில் வெளியாவதில் தொடர்ந்து பிரச்னைகள் ஏற்பட்ட வண்ணமே இருப்பதால், ஆங்கில மொழிபெயர்ப்பு குறித்த அவரது ஆலோசனை எனக்கு மகிழ்ச்சிகரமாக அமைந்தது.



சில நாட்களுக்குப் பிறகு கந்தரகோலம் புத்தகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு தயாராகிவிட்டதாகக் கூறி, அதன் மின்புத்தகத்தினை எனக்கு அனுப்பியிருந்தார். ஏதேனும் தவறுகள், மொழிபெயர்ப்புப் பிழைகள் இருப்பின் ஒருமுறைக்கு இருமுறை படித்துப்பார்த்துத் திருத்திக் கொடுக்குமாறும் கேட்டிருந்தார்.



எனக்கு ஆங்கிலம் அவ்வளவாகத் தெரியாது என்பதாலும், ஆங்கிலத்தையும் நான் தமிழிலேயே பேசுவேன் என்பதாலும், மற்றொரு நண்பரிடம் கொடுத்து அதனைத் தமிழில் மொழிபெயர்த்துத் தருமாறு கேட்டிருந்தேன். அவருக்குக் கந்தரகோலம் தமிழில் எழுத்தப்பட்ட விவரங்கள் தெரியாது.



ஓரிரு நாட்களுக்குப் பிறகு அந்த நண்பர் கந்தரகோலம் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழ் மொழிபெயர்ப்பினை எனக்கு அனுப்பியிருந்தார்.



அங்கேதான் ஆரம்பித்தது பிரச்னை. அதன் முதல் அத்தியாயமே என்னைப் புரட்டிபோட்டது. வழக்கமாகப் புத்தகங்களை நாம்தான் புரட்டுவோம். ஆனால், இது என்னைப் புரட்டியது. இப்படியும் மனிதர்கள் பூமியில் வாழ்கிறார்களா என்ற கோபம் என்னைத் திக்குமுக்காடச் செய்தது. எத்தனையோ சிரமப்பட்டு, கண்களை மூடிப் பல்லைக் கடித்துக் கொண்டு படித்துமுடித்தேன். அக்கிரமம்; அநியாயம். அதன் ஒவ்வொரு பாத்திரமும், ஒவ்வொரு வரியும் தமிழில் நான் எழுதிய கந்தரகோலம் புத்தகத்தை முழுமையாகக் காப்பி அடித்ததிருந்ததைப் போலத் தோன்றியது.



ஒவ்வொரு இடமும், அதன் பெயரையும் கூடக் கந்தரகோலம் புத்தகத்திலிருந்து காப்பியடித்திருந்தார்கள். ஒவ்வொரு காட்சியும், ஏன் ஒவ்வொரு சொல்லும் கூட தமிழில் நான் எழுதிய கந்தரகோலம் கதையோடு ஒத்துப்போனது. இந்தப் பிழைப்பிற்கேன் ஆங்கிலமொழிபெயர்ப்புச் செய்ய வேண்டும்? ஆங்கிலேயர்கள் எல்லோருமே இப்படித்தான் போலும். எதற்காகக் கந்தரகோலம் புத்தகத்தினை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க விரும்புவதாகத் தெரிவிக்க வேண்டும், பின் எதற்காக தமிழில் நான் எழுதிய புத்தகத்தினைப் பார்த்து அட்டக்காப்பியடித்து ஆங்கில மொழிபெயர்ப்பென்று சொல்லித்திரிய வேண்டும்? இலக்கிய உலகம் முன்போல இல்லை.



பின்னர் கந்தரகோலம் ஆங்கில மொழிபெயர்ப்பினை வெளியிடவேண்டாமென்று கூகுள் ட்ரான்ஸ்லேட்டரிடம் தெரிவித்துவிட்டேன். எனக்குக் காப்பியடிப்பதென்றாலே பிடிக்காது.



சரி; நான் சென்று மீதமுள்ள கடிதங்களுக்குப் பதில் எழுதுகிறேன். எல்லாமே ஒரே கேள்விதானே, அதற்கேன் விதவிதமாகப் பதிலளிக்க வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். 



சில நாட்களுக்கு முன்பாக கந்தரகோலம் வாசகர்கூட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தேன். கூட்டத்திற்கு வந்திருந்த இருபது பேர்களிடம் ”உங்களின் பெயர் என்ன?” என்ற ஒரே கேள்வியைத்தான் கேட்டேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலினைச் சொன்னார்கள். இதிலிருந்து ஒரே கேள்விக்கு எண்ணற்ற பதில்கள் இருக்கமுடியும் என்ற உண்மையைத் தெரிந்துகொண்டேன். இதிலும் பாருங்கள், இரண்டு பயல்கள் தங்களின் பெயரினைச் செல்வக்குமார் என்று கூறினார்கள். பெயரைக் கூடவா காப்பியடிக்கிறார்கள்? உடனே இருவரையும் என் வாசகர்களாக இருப்பதற்கே தகுதியற்றவர்கள் என்ற முத்திரை குத்தி வீட்டிற்கு அனுப்பிவிட்டேன். 


மேலும், கந்தரகோலம் புத்தகம் வெளியாவதில் ஏற்பட்டுவரும் சிக்கல்கள் விரைவில் சரியாக்கப்பட்டு, சடுதியில் இந்த வரலாற்று நாவல் வெளியாகும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.


அன்பும் நன்றியும்

மிகப் பிரபல ஆளுமை நாகராஜசோழன் எம்ஏ எம்எல்ஏ.

Tuesday, March 4, 2014

கந்தரகோலம் - முதல் எதிர்மறை விமர்சனம்!


தோழர் நாகராஜசோழன் எழுதியிருக்கும் முதல் புத்தகமான கந்தரகோலம் - சிறுகதை மற்றும் கவிதைத் தொகுப்பினை வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. கடந்த புத்தகக் கண்காட்சிக்கே வெளியிட நினைத்து, பதிப்பகத்தில் ஏற்பட்ட சிறு கோளாறு காரணமாக வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டது.

அவர் எழுதியிருக்கும் முதல் புத்தகமென்பதால் எங்களின் டெரர்கும்மி குழும உறுப்பினர்களில் ஒரு சிலருக்கு விமர்சனம் மற்றும் பிழைதிருத்தும் பொருட்டு இப்புத்தகத்தின் மின்பதிப்பினை அனுப்பியிருந்தார். புத்தக வெளியீட்டிற்குப் பிறகு வரும் விமர்சனங்களை நம்புவதற்கில்லை என்றும், தன் மீது கொண்ட அன்பினாலும் காழ்ப்புணர்ச்சியாலும் முறையே திட்டியும் பாராட்டியும் விமர்சனங்கள் வரலாம் என்பதால் அவற்றை நம்பமுடியாதென்பதவர் வாதம். இதனால் தன் நலனில் அக்கறை கொண்டவர்களின் விமர்சனத்தை - விமர்சனத்தை என்று கூட அவர் கூறவில்லை. கருத்தை அல்லது ஆலோசனையை என்று வைத்துக் கொள்ளலாம் - வேண்டி எங்களுக்கு அனுப்பியிருந்தார்.

பொதுவாகவே புத்தகங்கள் படிப்பதில் படு சோம்பேறியான நான் வழக்கம் போலவே அந்த 800 பக்க நாவலைப் படித்து முடிப்பதற்கு 4 மணி நேரம் எடுத்துக் கொண்டேன். நீங்கள் அறிவாளியாக இருந்திருந்தால் இந்நேரம் கந்தரகோலம் புத்தகம் கவிதை மற்றும் சிறுகதைத் தொகுப்பென்று மேலே சொன்னதை நினைத்துக் குழம்பிப்போயிருப்பீர்கள். ஆனால் நீங்கள் குழம்பியிருக்க வாய்ப்பில்லை.

இப்புத்தகத்தை முதல் முதலாகப் படித்து முடித்த நண்பர் பன்னிக்குட்டி ராம்சாமி கடந்த (24.03.2014) வியாழக்கிழமை அன்று அழைத்திருந்தார். வழக்கமான உற்சாகத்திற்கு மாறாக இந்தமுறை கொஞ்சம் கோபத்தில் இருந்தார். விசாரித்ததில் தான் கந்தரகோலம் புத்தகத்தைப் படித்துவிட்டதாகவும், அப்புத்தகமே தனது கோபத்திற்குக் காரணமென்றும், அப்புத்தகத்தைப் பற்றிய எதிர்மறை விமர்சனம் ஒன்றையும் என் முன்னால் வைத்தார். தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கும்போது முன்னால் வைக்கச் சாத்தியமில்லை என்றாலும் அவரும் நானும் ஒரே அறையில் இருந்துதான் தொலைபேசினோம் என்பதால் இது சாத்தியப்பட்டது.

அவர் கூறிய எதிர்மறை விமர்சனம் எனக்கும் சரியென்றேபட்டது. இருந்தாலும் இவ்விமர்சனத்தை முகநூலில் பகிரலாம் என்று நினைத்தபோது ஏதோ இடறியது. முதல் விமர்சனமே எதிர்மறை விமர்சனமாக அமைந்துவிட்டதேயென்று தோழர் நா.சோழன் வருந்தினால் என்ன செய்வதென்று நினைத்துப் பன்னிக்குட்டி ராம்சாமி அவர்களின் எதிர்மறை விமர்சனத்தை அப்படியே நா.சோழனுக்கு அனுப்பி, அதனை எனது முகநூலில் பகிர்ந்து கொள்ளட்டுமா என்று அனுமதி கோரியிருந்தேன். எனது கடிதத்திற்கு அவர் அனுப்பியிருக்கும் பதில் கீழே...




அன்பின் செல்வா,

தங்களின் கடிதம் கிடைத்தது. தோழர் பன்னிக்குட்டி ராம்சாமி என் புத்தகத்தைப் பற்றிக் கூறியிருக்கும் எதிர்மறை விமர்சனத்தை உங்களின் முகநூல் பக்கத்தில் பகிர்ந்துகொள்ளட்டுமா என்று அனுமதி கேட்டுள்ளீர்கள். அதை அனுமதிப்பதற்கு முன்னர் ஒன்றைக் கூறிக் கொள்ள விரும்புகிறேன். தமிழ் இலக்கியச் சூழலிலாகட்டும், அல்லது மேற்கத்திய, ஆப்பிரிக்க, ரஷ்ய என்று எந்த இலக்கியப் படைப்பிற்கும் வரும் விமர்சனங்களை முதலில் நேர்மறை, எதிர்மறை என்று விமர்சனங்களையே விமர்சிக்கும் போக்கைக் கைவிடுங்கள். அது ஒரு விமர்சனம் அவ்வளவே. ஏன் அதனை நேர்மறை விமர்சனம், எதிர்மறை விமர்சனம் என்று நீங்களே விமர்சித்துக் கொள்கிறீர்கள்? 

மேலும் நீங்கள் அந்த விமர்சனத்தை ஆங்கிலத்தில் சிந்தித்துத் தமிழில் மொழிபெயர்த்திருப்பது போலத் தெரிந்தது. உண்மையா? எனக்கும் ஆங்கிலத்திற்கும் ஒத்துவருவதே இல்லை. இருப்பினும் எனது கோடானகோடி ரசிகர்கள் நீங்கள் எப்பொழுது நேரடி ஆங்கிலத்தில் கதை எழுதப்போகிறீர்கள் என்று நச்சரிக்கிறார்கள். எனக்கு விருப்பமில்லை என்று சொல்லிவிட்டேன். தமிழில் 247 எழுத்துக்கள் இருக்கையில் வெறும் 26 எழுத்துக்களை மட்டுமே கொண்ட ஒரு மொழியினைக் கற்றுக் கொள்ள விரும்புவது வேடிக்கையாகவும், பைத்தியக்காரத்தனமாகவும் இருக்கிறது.

ஆக எழுத்துக்களின் எண்ணிக்கைதான் உனது பிரச்னையா என்று கேட்டான் நண்பனொருவன். வேறென்ன பிரச்னை இருந்துவிடமுடியும். தமிழ் எழுத்துக்களில் பத்தில் ஒரு பங்குமட்டுமே கொண்ட ஒரு மொழியில் எழுதி என்னை ஏன் நான் குறுக்கிக் கொள்ள வேண்டும்? இதன்மூலம் என்னை குறுகிய சிந்தனைக்காரன் என்று கூறமாட்டார்களா? இதற்கும் ஒரு வழி சொன்னான் அந்த நண்பன். ஆங்கிலத்தில் மொத்தம் 26 எழுத்துக்கள் அல்ல 52 எழுத்துக்கள் இருப்பதாகக் கூறினான். அதாவது சின்ன எழுத்துக்கள் 26 மற்றும் பெரிய எழுத்துக்கள் 26. இப்பவும் 52 தானே ஆகிறது. இதுவும் பற்றாதென்றேன். குறைந்தபட்சம் எத்தனை எழுத்துக்கள்தான் தேவைப்படும் என்று கேட்டான். தமிழில் உள்ள மொத்த எழுத்துக்களில் பாதியேனும் இருந்தால் பரவாயில்லை, குறைந்தபட்சம் 100 எழுத்துக்களாவது வேண்டுமென்றேன். அதற்கும் வழி சொன்னான். சிறிய மற்றும் பெரிய எழுத்துக்கள் 52, அவற்றின் ஒட்டெழுத்துக்கள் 52; ஆக மொத்தம் 104 என்பது அவன் கணக்கு.

ஆனால் எனக்கு 102 தான். அதாவது சிறிய ஒட்டெழுத்தில் q வும், பெரிய ஒட்டெழுத்தில் z எழுதவராது. எனவே 104 லிருந்து 2 ஐக் கழித்தால் 102 தானே? இதிலும் ஒரு பிரச்னை ஏற்பட்டது. 104 லிருந்து 2 ஐக் கழித்தால் எத்தனை வருமென்று மறந்துபோனது. மறந்துபோனது என்பதைவிட தெரியவில்லை என்பதுதான் உண்மையாக இருக்கும். ஏனென்றால் எனக்குக் கைகளிலும் கால்களிலும் சேர்த்து மொத்தம் 20 விரல்கள்தான் இருக்கின்றன. இவற்றை வைத்து நான் எப்படி 104 லிருந்து 2 ஐக் கழிப்பது ? 

இக்குழப்பத்திலிருந்து வெளிவர என் வாசகர்களில் ஐந்து பேரை அழைத்தேன். அவர்கள் ஒவ்வொருவரிடமும் 20 விரல்கள்;மொத்தம் 100. என்னிடம் 20. ஆக மொத்தம் 120 விரல்கள். இதிலிருந்து எளிதாகக் கணக்கிட்டுவிட்டோம். ஆனால் 104 லிருந்து 2 ஐக் கழித்தாலும் 104 தான் வந்தது. எனக்கோ ஆச்சர்யம். இது சாத்தியமில்லையே? பிறகு விசாரித்ததில் எனது வாசர்களில் ஒருவருக்கு கால்களில் 2 விரல்கள் கூடுதலாக இருந்ததைக் கண்டறிந்தோம். பின்னர் அவரை அனுப்பிவிட்டு, அளவாக 20 விரல்கள் மட்டுமிருக்கும் வாசகரை வரவழைத்துக் கணக்கிட்டு விடையைக் கண்டறிந்தோம். 104 லிருந்து 2 போனால் 102 தான்.

இப்படியாக ஆங்கில எழுத்தின் எண்ணிக்கையை அதிகரித்தும் எனக்கு ஆங்கிலத்தின் மீது ஆர்வம் ஏற்படவில்லை. எனவே மீண்டும் தமிழிலேயே எழுதவந்துவிட்டேன். சரி விடுங்கள். ஆயிரம்தான் இருந்தாலும் ஆங்கிலத்தைத் தமிழில் பேசமுடியுமா என்ன?

கடந்த முறை ஊருக்குச் சென்றபோது ஏர்போர்ட்டிலிருந்து வீட்டிற்கு அரசுப் பேருந்தொன்றில் பயணித்தேன். வீடு சென்று சேர்ந்ததும்தான் தெரிந்தது, எனது மொபைலை ப்ளைட் மோடிலேயே வைத்திருந்தது. நல்ல வேளையாக கண்டக்டர் இதனைக் கண்டுபிடிக்கவில்லை. இல்லாவிட்டால் பஸ் கட்டணத்திற்குப் பதிலாக ப்ளைட் கட்டணத்தை வசூலித்திருப்பார். ஏன் இந்த அரசுப் பேருந்து ஓட்டுனர்கள் மட்டும் இவ்வளவு முட்டாள்களாக இருக்கிறார்களோ தெரியவில்லை. ஒவ்வொரு நாளும் இப்படி எத்தனைப் பேர் தங்களது மொபைலை ப்ளைட் மோடிற்கு மாற்றி வைத்துவிட்டு பஸ்ஸில் பயணம் செய்து ஏமாற்றுகிறார்களோ? இதனால் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படாதா? என்ன செய்வது ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்.

சொல்ல மறந்துவிட்டேன். கடந்த பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 28 நாட்களைத்தான் காலண்டரில் அச்சடித்திருந்தனர். வருடாவருடம் இவர்களுடன் இதே தொல்லையாய்ப் போய்விட்டது. இன்னும் இரண்டு நாட்களைச் சேர்த்து அடித்துத் தொலைத்தால் என்ன குறைந்துவிடப்போகிறது? அச்சடிக்காவிட்டால்தானே குறைகிறது. இந்த அநியாயத்தை எல்லாம் தட்டிக் கேட்க ஒருத்தன் வராமலா போய்விடுவான்? பார்க்கலாம்.

என்றும் அன்புடன்
நா.சோழன்

அவர் அனுப்பின இந்த ரிப்ளையைத் தொடர்ந்து தோழர் ப.ராம்சாமி அவர்கள் என்னிடம் கூறிய எதிர்மறைவிமர்சனத்தையும் இங்கே பதிய வேண்டியது கட்டாயமாகிறது.

கந்தரகோலம் புத்தகத்திற்கு வந்திருக்கும் முதல் எதிர்மறை விமர்சனம் :

“ ப்க்கார்டிக்கு சரியான சைடு டிஷ் மிக்சர்னு எழுதிவச்சிருக்கார். இது தப்பு. பக்கார்டிக்கு சரியான சைட் டிஷ் எதுனு கூடத் தெரியாதவங்கள்லாம் எதுக்கு புக் எழுதனும்? “