Tuesday, April 26, 2011

அறிவியல் கதை

முன்குறிப்பு : கொஞ்ச நாள் முன்னாடி பேய்க்கதையும் அதுக்கு முன்னாடி சரித்திரக் கதையும் படிச்சிருப்பீங்க. அப்படி படிக்காதவங்க நேரம் இருந்த போய் படிச்சுப் பாருங்க. அந்த வரிசைல இன்னிக்கு அறிவியல் கதை ஒன்னு.

எச்சரிக்கை : இந்தக் கதையில் வரும் சம்பவங்கள் யாவும் கற்பனையே. உயிருடன் இருப்பவர்கள் அல்லது இறந்தவர்களின் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்டால் அது தற்செயலானதே!

சுவற்றில் மாட்டப்பட்டிருந்த அந்தக் கடிகாரம் "டொக் டொக்" என்ற சப்தத்துடன் நொடிகளை விழுங்கி மணிகளைப் பிரசவித்துக்கொண்டிருந்தது. ரவி அந்தக் கடிகாரத்தைப் பார்த்தபொழுது அது ஒன்பது மணிகளைப் பிரசவித்து பத்தாவது மணியைப் பிரசவிக்க இன்னும் முப்பது நிமிடங்கள் இருப்பதாகக் கூறியது! தனது மும்முரமான காலை வேளைகளில் ஈடுப்பட்டிருந்த ரவி மணி 9.30 ஆனதும் அவனுக்குள் ஒரு மணிச்சத்தம் கேட்டது.தான் அயர்ன் செய்துகொண்டிருந்த சட்டையை விட்டுவிட்டு நேராக கிச்சனுக்குள் ஓடினான்.

கிச்சனில் மதியத்திற்குத் தேவையான உணவுகளைத் தயாரிக்கத் தொடங்கினான். ஒவ்வொரு பொருளையும் ஒருவித சோதனைக்கு உட்படுத்தி,  மிகத்துல்லியமாக எடையைச் சரிபார்த்து ஒவ்வொரு உணவு வகையையும் தயாரித்துக் கொண்டிருந்தான். ஒவ்வொரு உணவு வகையும் சுவையாக இருக்கிறதா என்பதையும் ஒருவித உபகரணம் கொண்டு சோதித்து அறிந்து கொண்டிருந்தான். இந்த இடத்தில் உங்களுக்குக் குழப்பம் வரலாம். ஆம் , ரவி ஏன் உணவு வகைகளை சோதிப்பதற்கு ஒரு தனியான உபகரணத்தைப் பயன்படுத்தினான் ? ரவியைப் பற்றிய சிறு அறிமுகம் உங்களது சந்தேகத்தைப் போக்கும் என்பதால் அடுத்த பத்தி முழுவது ரவியைப் பற்றிய அறிமுகத்திற்காக Install செய்யப்படுகிறது.

ரவி ஒரு இயந்திர மனிதன். அறிவியல் கதை என்றால் இயந்திர மனிதன் என்று வருது இயற்கைதானே. ஆனால் ரவி செயற்கையானவன். நீங்கள் எந்திரன் படம் பார்த்திருக்கலாம். பார்க்காதவர்களுக்கு சிறுகுறிப்பு என்று இங்கே எதையும் சொல்லப்போவதில்லை என்பதால் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். ரவியைத் தயாரித்தது ஒரு ஆப்பிரிக்கக் கம்பனி என்றால் உங்களால் ஜீரணிக்க முடிகறதா? இந்தியக் கம்பெனி என்றாலும் ஜீரணிக்க முடியாது! ஏனென்றால் ரவியின் உடல் முழுவதும் இரும்பால் செய்யப்பட்டது. உண்மையில் ரவி ஆப்பிரிக்காவில் தயாரிக்கப்பட்டவன்தான். தொழில்நுட்பத்தில் பின்தங்கி இருக்கும் ஆப்பிரிக்காவில் இது எப்படி சாத்தியம் என்ற உங்களது கேள்வியை விட்டுவிட்டு , ரவி எப்படி இந்தியாவிற்குள் வந்தான் என்பதைப் பார்க்கலாம்.

ரவியின் தற்போதைய ஓனர் வின்சென்ட் ஒருமுறை ஆப்பிரிக்கா சென்றிருந்தார். அங்கிருந்து இந்தியா திரும்புகையில் ஆப்பிரிக்கா வந்ததின் நினைவாக ஏதாவது பொருள் வாங்கிச் செல்லலாம் என்று ஒரு பலசரக்குக் கடைக்குள் நுழைந்தார். பலசரக்கு என்ற வார்த்தையைத் தவறாகப் புரிந்துகொண்டு வின்சென்ட் ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு மதுபானக் கடைக்குள் நுழைந்தார் என்ற பொருள் கொ(ல்)ள்வோர் தயவு செய்து அந்த எண்ணத்தில் இருந்து திரும்பிவரவும்! அந்தப் பலசரக்குக் கடையில் நுழைந்த வின்சென்ட் எந்தப் பொருளை வாங்கலாம் என்ற யோசனையில் ஆழ்ந்தார். அப்பொழுது அவரது குழப்பத்தினைத் தெரிந்து கொண்ட கடை உரிமையாளர் வின்சென்ட்டிடம் ஏதோ கூறினார்.

  ஆனால் அது வின்சென்ட்டிற்கு சரியாகப் புரிவில்லை. அரைகுறை ஆங்கிலம் தெரிந்த வின்சென்ட் அந்தக் கடை உரிமையாளர் தெளிவான ஆங்கிலத்தில் பேசுகிறார் என்று நினைத்ததுடன் , தான் தெரியாது என்று சொன்னால் தன்னைப்பற்றித் தவறாக எண்ணக்கூடும் என்று கருதியதால் அவர் சொன்னதிற்கெல்லாம் YES, OK என்ற வார்த்தைகளை மட்டும் சொல்லி இந்த இயந்திர மனிதனான ரவியை வாங்கி வந்தார்! உண்மையில் அந்தக் கடைக்காரர் பேசியது ஆங்கிலம் கிடையாது , ஆப்பிரிக்க உள்ளூர் மொழி! மேலும் ரவியைப் பற்றி அவர் கூறியது என்னவென்றால் " இந்த ரோபோட்டினை ஜப்பானில் இருந்து கடத்திக் கொண்டுவந்துள்ளோம், அதனால் இதனை மலிவு விலையில் விற்கின்றோம் " என்பதுதான்.

  இப்படியாக நமது ரவியின் இந்தியப் பயணம் இனிதே முடிந்தது. இந்தியா வந்த வின்சென்ட் அந்த இயந்திரத்தின் பாகங்களைப் பொருத்தி அதற்கு ரவி என்ற பெயரும் கொடுத்து இதோ இப்பொழுது அவனை தனது வீட்டு வேலைக்காரனாக்கி அழகு பார்த்துக்கொண்டிருக்கிறார். அன்றாட வேலைகளை ரவியின் நினைவகத்தில் சேமித்துவிட்டு அதனை எப்படி செய்யவேண்டும் என்ற கட்டளைகளையும் நிரப்பிவிட்டு வின்சென்ட் அலுவலகம் சென்றுவிட்டார். ரவியைப் பற்றி இன்னும் சில பத்திகள் சொல்லவேண்டும் என்ற எனது ஆவலை ஏற்கெனவே இது பெரிய பதிவாகிவிட்டது என்கிற உள்ளுணர்வு தடுப்பதால் இதோ விரைவில் வின்சென்ட் அலுவலகம் முடிந்து வீடு திரும்பிய பின்னர் நடந்த நிகழ்சிகளைப் பார்க்கலாம்.

  கடிகாரம் முதல் பத்தியில் சொல்லப்பட்டதுபோல உவமையினை நினைத்துகொண்டு மணி 6 ஆகிவிட்டது என்பதைக் கருத்தில்கொள்க. வின்சென்ட் அலுவலகத்தில் இருந்து திரும்பிக்கொண்டிருதார். ஆப்பிரிக்காவில் இருந்து வாங்கிவந்த தனது இயந்திர மனிதன் என்ன செய்துகொண்டிருக்கிறான் என்ற அடக்க முடியாத ஆவலுடன் வீட்டிற்குள் நுழைந்தார். காலையில் இருந்து தான் கொடுத்த வேலைகளை அவன் சரியாகச் செய்திருக்கிறானா என்று சோதனையிடத் தொடங்கினார். சமையலறைக்குள் சென்று உணவு வகைகளைச் சோதனயிட்டவர் சந்தோசத்தில் பூரித்துப் போனார். அவ்வளவு சுவையான உணவு. பின்னர் அடுத்ததாக பிரிட்ஜினைத் திறந்து பார்த்தார். அவர் சொன்னது போல சில உணவுவகைகளை எடுத்து உள்ளே வைக்கப்பட்டிருந்தது. ஆனால் வின்சென்ட்டிற்குக் கோபம் கோபமாக வந்தது. காரணம் பிரிட்ஜிற்கு மின்சார இணைப்புக் கொடுக்கப்படாமல் இருந்தது.

  ரவியை அழைத்து கண்ணா பின்னவென்று திட்டிவிட நினைத்தார். ஆனால் அவன் ஒரு இயந்திரம் தானே என்பதை அறிந்து பின்னர் அதற்கான காரணத்தை ஆராய்ந்தார். அனைத்து கட்டளைகளையும் கொடுத்தவர் மின்சார சுவிட்சினை ஆன் செய்யவேண்டும் என்ற கட்டளையை மட்டும் கொடுக்காமல் விட்டிருந்தார். மேலும் ரவியின் நினைவகப் பகுதி மிகவும் குறைவாக உள்ளதையும் அறிந்தார். காரணம் என்னவென்றால் " மலிவு விலையில் , அதுவும் திருடிக்கொண்டு வந்த பொருள் நன்றாக உழைத்ததாக சரித்திரமே இல்லை " என்ற நீதியை விளக்கும் பொருட்டு எழுதப்பட்ட இந்தக் கதையே!

நீதி : அறிவியல் கதைல அறிவியல் விளக்கங்கள் இருக்கனுமா என்ன ?

பின்குறிப்பு :   அடுத்ததா இலக்கியக் கதை ஒன்னு எழுதலாம்னு இருக்கேன்! என்ன சொல்லுறீங்க ?

25 comments:

மாணவன் said...

VADAI....

மாணவன் said...

நல்லாருக்கு செல்வா... தொடர்ந்து எழுது :)

மாணவன் said...

//அடுத்ததா இலக்கியக் கதை ஒன்னு எழுதலாம்னு இருக்கேன்! என்ன சொல்லுறீங்க ?//

கண்டிப்பா..... மிகுந்த எதிர்பார்ப்புடன்.... :))

Anonymous said...

சுவற்றில் மாட்டப்பட்டிருந்த அந்தக் கடிகாரம் "டொக் டொக்" என்ற சப்தத்துடன் நொடிகளை விழுங்கி மணிகளைப் பிரசவித்துக்கொண்டிருந்தது.//
ஒப்பனிங்கே கலக்கலா

Anonymous said...

ரவி ஒரு இயந்திர மனிதன். //
ரொம்ப பழைய பெயரா இருக்கே ..விட்டா இயந்திர மனிதனுக்கு கருப்புசாமின்னு பெயர் வைப்பே போல..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ரவி அந்தக் கடிகாரத்தைப் பார்த்தபொழுது அது ஒன்பது மணிகளைப் பிரசவித்து பத்தாவது மணியைப் பிரசவிக்க இன்னும் முப்பது நிமிடங்கள் இருப்பதாகக் கூறியது//

சிசேரியனா? நார்மல் டெலிவரியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ரவியைத் தயாரித்தது ஒரு ஆப்பிரிக்கக் கம்பனி என்றால் உங்களால் ஜீரணிக்க முடிகறதா?//

இல்லைன்னா இஞ்சி மரப்பா சாப்பிடனுமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அடுத்ததா இலக்கியக் கதை ஒன்னு எழுதலாம்னு இருக்கேன்! என்ன சொல்லுறீங்க ?//

என்னது இலக்கியாவோட உக்கார்ந்து கதை எழுத போறியா? சொல்லவே இல்லை?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ரவிக்கு திருஷ்டி சுத்தி கால்ல எலுமிச்சம்பழம் மாட்டினியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நீதி: செல்வா கதைகள் படிப்பவன் ரத்தம் கக்கி சாவான்

செல்வா said...

அனைவருக்கும் நன்றி :-)

karthikkumar said...

அடுத்ததா இலக்கியக் கதை ஒன்னு எழுதலாம்னு இருக்கேன்! என்ன சொல்லுறீங்க//
இனி அதுவேறையா... நீ நடத்து மச்சி ...:))

MANO நாஞ்சில் மனோ said...

ஹே ஹே ஹே ஹே நானும் வந்துட்டேம்லேய் மக்கா....

MANO நாஞ்சில் மனோ said...

//நீங்கள் எந்திரன் படம் பார்த்திருக்கலாம். பார்க்காதவர்களுக்கு சிறுகுறிப்பு என்று இங்கே எதையும் சொல்லப்போவதில்லை //

கொய்யால நக்கலை பாரு....

MANO நாஞ்சில் மனோ said...

//ரவியின் தற்போதைய ஓனர் வின்சென்ட் ஒருமுறை ஆப்பிரிக்கா சென்றிருந்தார்//

கொரில்லாதானே....

MANO நாஞ்சில் மனோ said...

//அப்பொழுது அவரது குழப்பத்தினைத் தெரிந்து கொண்ட கடை உரிமையாளர் வின்சென்ட்டிடம் ஏதோ கூறினார்.//

மொத்தமும் குழப்பவாதிங்கதானா....

MANO நாஞ்சில் மனோ said...

சரி சரி நீ அசத்து, நான் ஓட்டு போட்டுட்டு கிளம்புறேன்.

MANO நாஞ்சில் மனோ said...

தமிழ்மணம் ஏழாவது ஓட்டு என்னுது....

Unknown said...

கதை சூப்பர்

பெசொவி said...

still laughing!
Super!

இராஜராஜேஸ்வரி said...

மலிவு விலையில் , அதுவும் திருடிக்கொண்டு வந்த பொருள் நன்றாக உழைத்ததாக சரித்திரமே இல்லை " என்ற நீதியை விளக்கும் பொருட்டு எழுதப்பட்ட இந்தக் கதைய//
நீதிக்குத் தலை வணங்கு!

Unknown said...

Machi Panni Kutty ini Ilakkiyammnu Eluthina Konne Pudvan Am new to yuw mn

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

ரத்த பூமியில முதல் முறையா கால் பதிச்சிட்டேன்...அ(றி)வியல் கதையை ஒரு வித மிரட்சியுடன் படித்து நிமிர்கையில் பின் கழுத்தில் வியர்த்துவிட்டது...ர்ர்ர்ரியலி சூப்பரான கற்பனை கதை..

DREAMER said...

கதை உண்மையில் அருமை..!

-
DREAMER

வணங்காமுடி...! said...

நல்ல திறமை இருப்பதாக தெரிகிறது. அதை இப்படி எல்லாம் வீணடிக்காதீர்கள்.