Thursday, February 13, 2014

கவுண்டரின் ஆசிரமத்தில் காதலர் தினம்!




காதலர் தினம்... காலை.

சுவாமி கவுண்டானந்தாவின் ஆசிரமம்... காலையில் பூஜை முடித்து வெளியில்வரும்போதே அவரது சிஷ்யர் செந்தில் சோகமாக பாடல் கேட்டுக்கொண்டிருக்கிறார்....

"காதல் என் காதல் அது கண்ணீருல...
போச்சு அது போச்சு வெந்நீரில...
அடிடா அவள..உதைடா அவள..

"அடிசெருப்பால.. வர்ற போறவங்ககிட்ட அஞ்சு பத்து வாங்குற மொன்ன நாய்க்கு என்னடா காதல் வேண்டி கிடக்கு? அடடடா... இந்த லவ் பண்றவைங்க தொல்ல தாங்க முடியலடா சாமி... வெந்தது..வேகாதது..பிஞ்சது... பெருத்தது எல்லாம் லவ் பண்ணிக்கிட்டு திரியுதுங்க... ஒவ்வொருததனையா புடிச்சு மூஞ்சிய அடுப்புல வச்சு கருக்கனும்..படுவா... ஓடிப்போயிரு சொல்லிப்புட்டேன்"  கடுப்பாகிறார் கவுண்டானந்தா.

செந்தில் அவசரமாக எழுந்து வணங்குகிறார்... " சுவாமி..சுவாமி... அது ஒரு  பெரிய கதை....."

"சரிட்ரா நாயே...இவரு பெரிய பாரதிராஜா... அப்பிடியே பிளாஸ்பேக்க ஓப்பன் பண்றாரு.. அடச்சீ நாயே.. போ....போய்... ஆசிர்வாதம்  வாங்க வந்தவங்கள வரிசையா உள்ள அனுப்பு.. டேய் தகர வாயா.... அவங்ககிட்ட ஏதாவது தனியா  கமிஷன் வாங்குன... படுவா..மண்டைல தேங்காய வச்சு தேச்சுப்புடுவேன்.. ராஸ்கோல்... போ.. போய் வரச்சொல்லு"

வெளியே போன செந்தில் திரும்ப வருகிறார்.. " சுவாமி..சுவாமி.. ஏதோ இன்னிக்கு லவ்வர்ஸ் டேயாம்.. வெளில ஒரே லவ்வர்சா வந்துருக்காங்க..உங்ககிட்ட ஆசிர்வாதம் வாங்கனுமாம்.... "

"அடங்கொன்னியா... வழக்கமா பார்க்கு..பீச்சுன்னுதானே போவானுங்க..இப்ப என்ன ஆசிரமம் எல்லாம் வர ஆரம்பிச்சிட்டானுங்க? அதவிட இங்க ஜாலியா இருக்கும்னு எவனோ பொரலிய கெளப்பி விட்டாண்டோ...சரிடா..போய் ஒவ்வொரு ஜோடியா உள்ள அனுப்பு.."

முதலில் ஒரு ஜோடி உள்ளே வருகிறது...

" சுவாமி வணக்கம்.. எங்கள ஆசிர்வாதம் பண்ணனும்..எங்க காதல நீங்கதான் சேர்த்து வைக்கணும்... வீட்ல ஒரே பிரச்சனையா இருக்கு.. உங்களைத்தான்  நம்பியிருக்கோம்"

" சரி..சரி.. காதல்னா பிரச்சனைதான்... நீங்க எப்பிடி காதலிச்சிங்க? என்ன பிரச்னை? தெளிவா சொல்லுங்க...

" சாமி.. என் பேரு டேவிட்.. இவ பேரு மல்லிகா...

" அடடடா...... மத நல்லிணக்கம்?  அட்ராசக்க..அட்ராசக்க... மேல சொல்லு..மேல சொல்லு....

"ஒரு வாரம் முன்னாடிதான் இவள ரெஜிஸ்டர் ஆபிஸ்ல கல்யாணத்துக்காக போயிருக்கும்போது பார்த்தேன்.. இவளோட கண்ண(??) பார்த்ததுமே இவ எனக்குத்தான்னு  முடிவு பண்ணிட்டேன்.... அவளுக்கும் அப்பிடிதான்... அவங்க வீட்லயும் எங்க வீட்லயும் கூல்ட்ரிங்க்ஸ் சாப்ட வெளில போன நேரம் பார்த்து தனியா அவள பார்த்து  என் காதல அவகிட்ட சொன்னேன்.. அவளும் உடனே ஓக்கே சொல்லிட்டா... கொஞ்சம் கூட லேட் பண்ணாம அப்பிடியே பின்வாசல் வழியா ஊர விட்டு ஓடி வந்துட்டோம்... ஆனா நாங்க எங்க போனாலும் எங்க ரெண்டு பேர் வீட்ல இருந்து எங்கள துரத்திகிட்டே இருக்காங்க.. நீங்கதான் சாமி எங்கள காப்பாத்தணும்" என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தனர்.

" அடங்கொன்னியா... இளஞ்ஜோடிகள பிரிக்கிறதே இந்த தகப்பன்களுக்கு வேலையா போச்சு.. சரி.. டேவிட்..நீ சொல்லு..உன் வீட்ல என்ன பிரச்னை? யார் பிரச்னை பண்றா?"

" சாமி.. எங்க வீட்லகூட அவ்வளவா பிரச்னை இல்லை சாமி.. தண்ணி தொளிச்சு விட்டுட்டாங்க....

" அட நாயே.. அப்புறம் யார்தான் உன்னை தொறத்துனா?

" அதான் சாமி.. எங்க வீட்ல கூட விட்டுட்டாங்க.. ஆனா என் பொண்டாட்டி வீட்லதான் சாமி ஆள் வச்சு துரத்துறாங்க...

" டேய்ய்.. என்னடா சொல்ற? பொண்டாட்டி வீட்லையா? அடங்கொன்னியா... ஏம்மா..இந்தாம்ம்மா பொண்ணு.. இந்த நாய்க்கு கல்யாணம் ஆயிருச்சுன்னு உனக்கு தெரியுமாம்மா? தெரிஞ்சுமா லவ் பண்ணுன?

" தெரியும் சாமி..  ஏன்னா..எனக்கு கல்யாணம் ஆனத அவரு பெருந்தன்மையா ஏத்துக்கலையா? அதுமாதிரிதான் நானும் ஏத்துக்கிட்டேன்...."

" டேய்ய்..தல சுத்துதுடா... ங்கப்பா... பன்னாட பரதேசிங்களா... உங்க ரெண்டு பேருக்கும்தான்  கல்யாணம் ஆயிருச்சேடா.. எந்த கல்யாணத்துலடா பார்த்து இந்த கருமாந்திரம் புடிச்ச காதல பண்ணி தொலைச்சிங்க?

" சாமி.. எங்க காதல் தெய்வீக காதல்... தப்பா பேசாதிங்க... நான் என் கல்யாணத்த ரெஜிஸ்டர் பண்ண என் பொண்டாட்டியோட அங்க  போயிருந்தேன்.. இவ கல்யாணத்த ரெஜிஸ்டர் பண்ண இவ புருசனோட வந்துருந்தா.. நாங்க பார்த்ததுமே எங்க காதல் அப்பிடியே உள்ள இருந்து ஊத்து மாதிரி கிளம்பி வந்துருச்சு.. அதான் உடனே ஓடி வந்துட்டோம்... இப்ப ஹெல்ப் பண்ண முடியுமா முடியாதா?

" அடங்கொன்னியா... கல்யாணத்த ரெஜிஸ்டர் பண்ண போனீங்களா? அப்ப உங்களுக்கு எப்ப கல்யாணம் ஆனுச்சு?

" ரெஜிஸ்டர் பண்ண போன ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் சாமி... அது ஒரு கெட்ட கனவா நினச்சு மறந்துட்டேன் சாமி... இப்ப ஆசிர்வாதம் பண்ணுங்க.."

" அட..கருமாந்திரம் புடிச்சவனுங்களா... மரத்த பார்த்தா கால தூக்குற நாய் மாதிரி பார்க்குற பொண்ண பூரா நீ லவ் பண்ணுவ? உனக்கு நான் ஆசிர்வாதம் பண்ணனுமா? இந்தா வாங்கிக்க..க்க்க்ரர்ர்..த்தூ.. இந்தாம்ம்மா பொண்ணு மல்லிகா.. (பேர பாரு? மானம் கெட்ட நாய்க்கு மல்லிகா?) இன்னும் ஒரு நிமிஷம் உங்கள இங்க பார்த்தேன்..சுடுபெட்டிய மூஞ்சில வச்சு தேச்சுபோடுவேன்.. ஓடி போயிருங்க சொல்லிபுட்டேன்...  டேய்ய் சிஷ்யா.. 
 
 


செந்தில் வேகமாக உள்ளே ஓடிவருகிறார்.. " சுவாமி..சுவாமி... அடுத்த ஜோடிய உள்ள வர சொல்லவா?

" டேய்ய் மங்குஸ் மண்டையா..இனி காதல் கீதல்னு எவனையாது உள்ள அனுப்புன... படுவா படுக்க வச்சு லாரிய விட்டு ஏத்திபுடுவேன் சொல்லிபுட்டேன்... அய்யயையையோ.. அட ஆண்டவா...காலங்காத்தால..கண்ட கழிசடைங்களை  எல்லாம் பார்க்க வைக்கிறியே? டோர் லாக்.. ஆசிரமம் க்ளோஸ்...

சாமியிடம் காதலர்தின ஆசிர்வாதம் வாங்க நினைப்பவர்கள் கீழ்க்கண்ட முகவரியில் தொடர்புகொள்ளவும்.

சிரிப்பு போலிஸ்
சிப்பு போலிஸ் ப்ளாக்.
பாலிடால்புரம்.
மொக்கையூர்.

குறிப்பு - இது ஒரு மீள் பதிவு!