Wednesday, February 3, 2016

சமகால திரைவிமர்சனப் படைப்பிலக்கியங்கள - ஒரு பார்வை!

அன்பின் ப.ரா,

இரண்டு நாட்களுக்கும் முன்பாக நானும் என் அறைத் தோழனும் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஒன்றினைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அப்பொழுது அந்தப் படத்தைப் பற்றி நமது இணைய சமூகம் என்ன நினைக்கிறது என்றறிவதற்காக இணையத்தில் உலாவிக் கொண்டிருந்தேன். அப்பொழுது அந்தப் படத்தினைப் பற்றிய இலக்கியத் தரத்திலான விமர்சனக் கட்டுரை ஒன்றினைக் காண நேர்ந்தது. அதில் இருந்தவை நிச்சயமாகத் தமிழ் எழுத்துக்கள்தான். ஆனால், சேர்த்துப் படிக்கையில் அது வேறொரு மொழியாகத் தெரிந்தது. என் நண்பனிடம் கொடுத்து அதனைப் படிக்கச் சொன்னேன். நீண்ட நேரம் அதைப் படித்தான். தமிழ் வழிக் கல்வி கற்றவன்தான்.

முதலில் அவன் நேராகவும், செல்ஃபோனை நேராகவும் பிடித்துப் படித்தான். பின்னர் செல்ஃபோனைத் தலைகீழாகப் பிடித்துக் கொண்டு கொஞ்ச நேரம் படித்தான். அதன் பின்னர் செல்ஃபோனை என் கையில் கொடுத்துவிட்டு, அங்கிருந்த இருக்கையில் அப்படியே தலைகீழாக நின்று கொண்டு படித்தான். மறுபடி செல்ஃபோனைத் தலைகீழாகப் பிடிக்கும்படிக் கூறிக்கொண்டு மறுபடியும் படித்தான். கடைசியில் அந்தப் படம் முடிந்துவிட்டது. இவன் இன்னமும் விமர்சனத்தைப் படித்து முடிக்கவில்லை. 

இப்பொழுதெல்லாம் நள்ளிரவில் திடீரென எழுந்து விழுமியங்கள், எச்சங்கள், கோட்பாடுகள், நுண் கருத்துத் திணிப்புக்கள், அல்லலுறும் மனது, மனப்பகிர்த் துளிகளின் பிம்பங்கள் என்றெல்லாம் பேச ஆரம்பித்துவிடுகிறான். திரைப்படங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை விடவும் அதைக் குறித்த இலக்கிய விமர்சனங்கள் இந்தளவு தாக்கத்தை ஏற்படுத்துமா என்று பிரமிப்பாக இருக்கிறது.

தமிழின் மிக முக்கியமான ஆளுமையான தாங்கள், திரைப்படம் குறித்த இலக்கிய விமர்சனங்களின் தாக்கம் குறித்து என்ன நினைக்கிறீர்கள். சுய உணர்வு நிலையில்லாத தமிழ்ச் சமூகத்தில் இது போன்ற உன்னதமான விமர்சனங்கள் உள்ளிழுத்துக் கொள்ளப்படும் என்று கருதுகிறீர்களா?  
இப்படிக்கு
Selvakumar Palanisamy


அன்பின் செல்வா,

படத்தை பார்த்துவிட்டு விமர்சனத்தை படிக்க முயற்சி செய்திருக்கிறீர்கள். விமர்சனத்தை படிக்கும் முன் படத்தை பார்ப்பது என்பது கக்கா போகும் முன் கழுவுவதை போன்றது. தவறேதும் இல்லையென்றாலும் சரி என்று சொல்ல முடியாது அல்லவா? அது இருக்கட்டும், விமர்சனத்திற்கு வருவோம். இலக்கியத் தரத்திலான விமர்சனம் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். அது இலக்கியத்தரம் என்று முன்பே தாங்கள் அறிந்திருப்பது மிக்க மகிழ்ச்சி. ஆனால் தமிழில் இலக்கியம் என்று வந்துவிட்டால் அதை வாசிப்பதற்கு முன்னர்  சில விஷயங்களை உள்வாங்கி விளங்கிக் கொள்ள வேண்டும். 


தற்கால தமிழ் இலக்கிய சூழலில் பல்வேறு ஞானமரபுகள் தோன்றி வளர்த்தெடுக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொன்றும் தமக்கென தனித்தன்மையான எச்சங்களை விரவி வைத்துக் கொண்டிருக்கின்றன. அவற்றின் கோட்பாடுகள் பெரும்பாலும் தொன்மையான விழுமியங்களில் இருந்து கடனாக பெறப்பட்டவையே. அங்கே காணப்படும் நுண்ணரசியல், பல நேரங்களில் ஞானமரபுகளை உடைத்தெறிவதாக இருந்த போதும், ஆழமான படிமங்கள் ஊடான கருத்து திணிப்புகள் ஏற்படுத்தி வரும் பிம்பங்கள் இந்த கட்டமைப்புகளைத் தக்க வைக்கும் வேலையை இடையறாது செய்து வருகின்றன. இவற்றை அறிந்திருந்தால் மட்டுமே தமிழ் இலக்கிய கட்டுரைகளை வாசிக்க முடியும். தெரியாமல் வாசித்து விட்டீர்கள் என்றால் அது இலக்கிய கட்டுரையே அல்ல என்று அறிக. ஆகவே நீங்கள் உடனடியாக ஏதாவது ஒரு இலக்கிய ஞானமரபை தெரிவு செய்து, ஆசான் ஒருவரை பிம்பமாக ஏற்றுக்கொள்ள முயல வேண்டும்.  

நிற்க. இப்போது உங்கள் நண்பரின் பிரச்சனைக்கு வருவோம். செல்போனை தலைகீழாக வைத்தும், தானே தலைகீழாக நின்றும் படிக்க முயற்சித்ததாக கூறி இருக்கிறீர்கள். அதுதான் நீங்கள் இருவரும் செய்த இமாலய தவறு. இலக்கியம் வளர்ப்பதற்கென்றே அரசு ஆங்காங்கே கடைகள் கட்டி சில நீர்மங்களை வினியோகம் செய்து வருவதை அறியாமல் நீங்கள் தமிழராக இருக்கவே வாய்ப்பில்லை. இலக்கிய விமர்சனம் படிக்க வேண்டும் என்று முடிவு செய்த மறுகணமே நீங்கள் அந்த கடைகளுக்கு விஜயம் செய்திருக்க வேண்டும். அங்கே அதைவிட இலக்கியத்தரம் மிக்க விமர்சனங்கள் வாயால் எழுதப்படுவதை செவிகுளிர பார்த்திருக்கலாம். தலைகீழாக, ஒருக்களித்தவாறு, கோணலாக, நேராக என்று அனைத்து தளங்களிலும் ஒரே நேரத்தில் இலக்கியம் வாசித்த அனுபவம் உடனடியாகக் கிடைத்திருக்கும். 

இது எதையும் செய்யாமல் நேரடியாக ஒரு இலக்கிய விமர்சனத்தை படிக்க வைத்து உங்கள் நண்பரை சுய மனமுரண்டு நிலையை அடைய வைத்திருக்கிறீர்கள். அவரை சரி செய்ய இப்போது ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. நள்ளிரவில் எழுந்து அவர் கூச்சலிடும் போது, ’தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி’ என்று சத்தமாக அவர் காதில் கத்தவும். ஆரம்பநிலை என்றால் உடனே சரியாகி விடுவார். அப்படியும் அடங்கவில்லை என்றால் ’சாட்டையடி பதிவு தோழர்’ என்று கத்தவும். இதற்கும் அடங்காத முற்றிய நிலை என்றால் அதற்கு இன்னொரு வழி இருக்கிறது.  ’சார் பத்மபூசன் வேணுமா’ என்று காதில் மிக மெதுவாக ரகசியம் பேசுவது போன்ற தொனியில் கேக்கவும்.... அடங்கியே தீருவார்!

திரைப்படங்களுக்கு எழுதப்படும் இலக்கியத்தரமான விமர்சனங்கள் குறித்து எமக்கு எப்பொழுதும் ஆழ்ந்த கவலை உண்டு. தமிழ்ப்படங்களே இலக்கியத்தின் உச்சகட்டம் எனும்போது அதை இலக்கியத் தரமாக விமர்சிக்கிறேன் என்பதே மிகப்பெரும் முரண்நகையாகும். இத்தகைய விமர்சனங்களில் காணப்படும் மிகைப்புகழ்ச்சிகள், குதர்க்க வாதங்கள், அதீத சொல்லாடல்கள், எள்ளல்கள் அனைத்தும் நம் விஜய் அண்ணாவின் ஓப்பனிங் சாங்கில் அவர் பார்க்கும் ஒரே ஒரு ஓரப் பார்வைக்கு அருகில் கூட வர இயலாது என்பதே எம் தெளிவு...!


இப்படிக்கு

பன்னிக்குட்டி ராம்சாமி