Monday, March 12, 2012

டெரர் கும்மி விருதுகள் 2011: போட்டி முடிவுகள்!




அனைவருக்கும் வணக்கம்,
மீண்டும் ஒரு முறை ஒரு சந்தோசமான அறிவிப்போடு உங்களைச் சந்திப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சியே. கடந்த டிசம்பர் மாதம் எங்களின் டெரர் கும்மி ஓராண்டு நிறைவு நாளை ஒட்டி நாங்கள் அறிவித்த டெரர் கும்மி விருதுகளுக்கு நீங்கள் அனைவரும் அளித்த ஆதரவிற்கு முதலில் நன்றி சொல்லிக்கொள்கிறோம்.

எங்கள் சந்தோசத்தை பகிரவும் எங்களை ஒன்றிணைத்த இந்த பதிவுலகிற்கு நாங்கள் ஏதாவது திருப்பி செய்யும் வாய்ப்பாகவும் கருதித்தான் இந்த டெரர் கும்மி விருதுகளை அறிவித்தோம். நாங்கள் எதிர்பார்த்ததுக்கும் மேலாக உங்கள் ஆதரவினை எங்களுக்கு தந்து எங்களை உற்சாகப்படுத்தியுள்ளீர்கள். இந்த ஊக்கமும் உற்சாகமும் எங்களை மேலும் புத்துணர்ச்சியோடு செயல்படவைக்கும்  என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்த போட்டியை முடிவு செய்த உடனே நாங்கள் ஏற்கனவே சொன்னதுபோல் இதில் எந்தவித ஒளிவு மறைவும் இருக்ககூடாது என்று முடிவு செய்தோம். மேலும் ஒவ்வொரு பிரிவுக்கும் சிறந்த நடுவர்களை கொண்டு தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் அந்த நடுவர்களும் பதிவுகளை பதிவர்களின் எந்த அடையாளமும் இல்லாமல் படித்து தேர்வு செய்யவேண்டும் என்று ஆரம்பத்திலே முடிவு செய்துவிட்டோம். அதற்காக எங்கள் குழுவின் தொழிநுட்ப வல்லுனர்களின் உழைப்பு அளவிடமுடியாதது.

போட்டிக்கு விளம்பர உதவி செய்த யுடான்ஸ் திரட்டிக்கு எங்கள் சிறப்பு நன்றிகள்.

நாங்கள் முன்பே சொன்னதுபோல ஒன்பது பிரிவுகளை தவிர்த்து ஹால் ஆஃப் ஃபேம் பிரிவு மட்டும் டெரர் கும்மி நண்பர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதற்கும் கடுமையான போட்டியே இருந்தது  என்று சொல்லலாம். இறுதிகட்டமாக மூன்று பதிவர்கள் வந்தார்கள். அவர்களில் ஒருவரைத்தான் நாங்கள் தேர்ந்தெடுத்துள்ளோம். அவரை நீங்களும் ஏற்றுக்கொள்வீர்கள் என்றே நம்புகிறோம்.

சரி.. வரலாறு போதும் முடிவுகளை சொல்லுங்கள் என்கிறீர்களா? அதுவும் சரிதான்... பிரிவு வாரியாக முடிவுகளும் அந்த பிரிவுகளுக்கு யார் யார் நடுவர்களாக இருந்தார்கள் என்பதையும்  கீழே வரிசையாக கொடுத்துள்ளோம். தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் எங்கள் டெரர் கும்மி சார்பாக வாழ்த்துக்களைத்  தெரிவித்துக்கொள்கிறோம். பரிசுகளை எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம் என்ற விபரங்களோடு வெற்றி பெற்றவர்களை விரைவில் தொடர்புகொள்கிறோம். போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எங்கள் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

1. அனுபவம்/ பயணக்கட்டுரை பிரிவு
இந்தப்பிரிவில் போட்டிக்கு இணைக்கப்பட்ட மொத்தப்பதிவுகளின் எண்ணிக்கை 64. இவற்றில் விதிமுறைகளுக்கு ஒவ்வாமல் போட்டியில் இருந்து ஏழு பதிவுகள் நீக்கப்பட்டு 57 பதிவுகள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இவற்றில் நடுவர்களால் சிறந்த பதிவுகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு டெரர் கும்மி விருதினைப்பெறும் அந்தப்பதிவுகள்.

                                         பதிவர்: சுவடுகள் 


இரண்டாம் பரிசு -  பதிவு: இலங்கையின் இயற்கை கொடை
                                        பதிவர்: என்னைத்தேடி...ஸ்ரீ

இந்த பிரிவிற்கு நடுவர்களாக இருந்து சிறந்த பதிவுகளை தேர்ந்தெடுத்து கொடுத்த கொஞ்சம் வெட்டிப்பேச்சு திருமதி.சித்ராஅவர்களுக்கும் நிழல்காலத்தில் திரு.சிவா அவர்களுக்கும் எங்கள் குழுவின் சார்பாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவர்களின் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.


2. அரசியல் பிரிவு
இந்தப்பிரிவில் போட்டிக்கு இணைக்கப்பட்ட மொத்தப்பதிவுகளின் எண்ணிக்கை 17. இவற்றில் விதிமுறைகளுக்கு ஒவ்வாமல் போட்டியில் இருந்து மூன்று பதிவுகள் நீக்கப்பட்டு 14 பதிவுகள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இவற்றில் நடுவர்களால் சிறந்த பதிவுகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு டெரர் கும்மி விருதினைப்பெறும் அந்தப்பதிவுகள்.


முதல் பரிசு -            பதிவு: அவர்கள் அறியாமையிலேயே இருக்கட்டும்
                                        பதிவர்: ஜானகிராமன்
                                       பதிவர்: சூறாவளி

இந்த பிரிவிற்கு நடுவர்களாக இருந்து சிறந்த பதிவுகளை தேர்ந்தெடுத்து கொடுத்த தேவியர் இல்லம் திரு. ஜோதிஜி அவர்களுக்கும் திரு. கே.ஆர்.பி. செந்தில் அவர்களுக்கும் எங்கள் குழுவின் சார்பாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவர்களின் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.


3. கதைகள் பிரிவு
இந்தப்பிரிவில் போட்டிக்கு இணைக்கப்பட்ட மொத்தப்பதிவுகளின் எண்ணிக்கை 37. இவற்றில் விதிமுறைகளுக்கு ஒவ்வாமல் போட்டியில் இருந்து ஒரே பதிவு மட்டும் நீக்கப்பட்டு 36 பதிவுகள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இவற்றில் நடுவர்களால் சிறந்த பதிவுகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு டெரர் கும்மி விருதினைப்பெறும் அந்தப்பதிவுகள்.

முதல் பரிசு -         பதிவு: நாமிருவர்
                                       பதிவர்: சுபத்ரா 


இரண்டாம் பரிசு -  பதிவு: பத்து ரூபாய் ஞானி!
                                       பதிவர்: வே.சுப்ரமணியன்
 
இந்த பிரிவிற்கு நடுவர்களாக இருந்து சிறந்த பதிவுகளை தேர்ந்தெடுத்து கொடுத்த பரிசல்காரன் அவர்களுக்கும் திரு. ஆர்.வி.எஸ். அவர்களுக்கும் எங்கள் குழுவின் சார்பாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவர்களின் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.


4. கவிதைகள் பிரிவு
இந்தப்பிரிவில் போட்டிக்கு இணைக்கப்பட்ட மொத்தப்பதிவுகளின் எண்ணிக்கை 45. இவற்றில் விதிமுறைகளுக்கு ஒவ்வாமல் போட்டியில் இருந்து ஒரே பதிவு மட்டும் நீக்கப்பட்டு 44 பதிவுகள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இவற்றில் நடுவர்களால் சிறந்த பதிவுகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு டெரர் கும்மி விருதினைப்பெறும் அந்தப்பதிவுகள்.


முதல் பரிசு  -           பதிவு: பொருந்தாமல் நிற்கும் இந்த தலைப்பு !
                                         பதிவர்: வி.பாலக்குமார் 


இரண்டாம் பரிசு -   பதிவு: போராளி....!
                                           பதிவர்: dheva 

இந்த பிரிவிற்கு நடுவர்களாக இருந்து சிறந்த பதிவுகளை தேர்ந்தெடுத்து கொடுத்த திரு.நேசமித்திரன் அவர்களுக்கும் திரு.தமிழ்க்காதலன்  அவர்களுக்கும் எங்கள் குழுவின் சார்பாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவர்களின் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.


5. திரைவிமர்சனம் பிரிவு
இந்தப்பிரிவில் போட்டிக்கு இணைக்கப்பட்ட மொத்தப்பதிவுகளின் எண்ணிக்கை 26. இவற்றில் விதிமுறைகளுக்கு ஒவ்வாமல் போட்டியில் இருந்து இரண்டு  பதிவுகள்  நீக்கப்பட்டு 24 பதிவுகள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இவற்றில் நடுவர்களால் சிறந்த பதிவுகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு டெரர் கும்மி விருதினைப்பெறும் அந்தப்பதிவுகள்.


முதல் பரிசு -                   பதிவு: வாகை சூட வா - திரைப்பார்வை
                                                 பதிவர்: கார்த்திகைப் பாண்டியன் 


இரண்டாம் பரிசு  -            பதிவு: Have a break Selva!
                                                     பதிவர்: கார்க்கி  

இந்த பிரிவிற்கு நடுவர்களாக இருந்து சிறந்த பதிவுகளை தேர்ந்தெடுத்து கொடுத்த திரு.கேபிள் சங்கர் அவர்களுக்கும் திரு.கருந்தேள் ராஜேஷ் அவர்களுக்கும் எங்கள் குழுவின் சார்பாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவர்களின் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.


6. அறிவியல்/தொழில்நுட்பம் பிரிவு
இந்தப்பிரிவில் போட்டிக்கு இணைக்கப்பட்ட மொத்தப்பதிவுகளின் எண்ணிக்கை 20. இவற்றில் விதிமுறைகளுக்கு ஒவ்வாமல் போட்டியில் இருந்து ஒரு பதிவு மட்டும் நீக்கப்பட்டு 19 பதிவுகள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இவற்றில் நடுவர்களால் சிறந்த பதிவுகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு டெரர் கும்மி விருதினைப்பெறும் அந்தப்பதிவுகள்


முதல் பரிசு -            பதிவு: பிளாக் பெர்ரியும்.. ஸ்மார்ட் போன்களும்..
                                         பதிவர்: பதிவுலகில் பாபு 
                                                       பதிவர்:  Dr.Dolittle  

இந்த பிரிவிற்கு நடுவர்களாக இருந்து சிறந்த பதிவுகளை தேர்ந்தெடுத்து கொடுத்த புரியாத கிறுக்கல்கள் திரு. ஜி.எஸ்.ஆர் அவர்களுக்கும் கிரி பக்கங்கள் திரு.கிரி அவர்களுக்கும் எங்கள் குழுவின் சார்பாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவர்களின் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.


7. நகைச்சுவைப் பிரிவு
இந்தப்பிரிவில் போட்டிக்கு இணைக்கப்பட்ட மொத்தப்பதிவுகளின் எண்ணிக்கை 36. இவற்றில் விதிமுறைகளுக்கு ஒவ்வாமல் போட்டியில் இருந்து மூன்று பதிவுகள்  நீக்கப்பட்டு 33 பதிவுகள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இவற்றில் நடுவர்களால் சிறந்த பதிவுகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு டெரர் கும்மி விருதினைப்பெறும் அந்தப்பதிவுகள்


முதல் பரிசு -              பதிவு: NRI கொசுத்தொல்லைகள்
                                            பதிவர்: ILA(@)இளா 


இரண்டாம் பரிசு  -     பதிவு: வெடி - உலகப்படங்களின் உச்சம்!
                                             பதிவர்: சிவகுமார் ! 

இந்த பிரிவிற்கு நடுவர்களாக இருந்து சிறந்த பதிவுகளை தேர்ந்தெடுத்து கொடுத்த திரு.கந்ததாசன் ப்ளஸ் அவர்களுக்கும் திரு. குசும்பன் சரவணன் அவர்களுக்கும் எங்கள் குழுவின் சார்பாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவர்களின் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.


8. விழிப்புணர்வு பிரிவு
இந்தப்பிரிவில் போட்டிக்கு இணைக்கப்பட்ட மொத்தப்பதிவுகளின் எண்ணிக்கை 52. இவற்றில் விதிமுறைகளுக்கு ஒவ்வாமல் போட்டியில் இருந்து பதிவுகள்  நீக்கப்பட்டு 44 பதிவுகள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இவற்றில் நடுவர்களால் சிறந்த பதிவுகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு டெரர் கும்மி விருதினைப்பெறும் அந்தப்பதிவுகள்.


முதல் பரிசு -                பதிவு: இயற்கையைக் காப்போம்
                                              பதிவர்: செல்விஷங்கர் 
 
இரண்டாம் பரிசு  -      பதிவு: சைபர் க்ரைம் - ஒரு பார்வை
                                               பதிவர்: Abdul Basith  
 
இந்த பிரிவிற்கு நடுவர்களாக இருந்து சிறந்த பதிவுகளை தேர்ந்தெடுத்து கொடுத்த திரு. சீனாஐயா  அவர்களுக்கும் திரு.புதுகை அப்துல்லா  அவர்களுக்கும் எங்கள் குழுவின் சார்பாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவர்களின் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.


9. சிறந்த புதிய பதிவர் பிரிவு 
இந்தப்பிரிவில் போட்டிக்கு தங்கள் தளங்களை இணைத்த பதிவர்களின்  எண்ணிக்கை 30. இவற்றில் விதிமுறைகளுக்கு ஒவ்வாமல் போட்டியில் இருந்து 7 தளங்கள்  நீக்கப்பட்டு 23 தளங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இவற்றில் நடுவர்களால் சிறந்த தளங்களாக  தேர்ந்தெடுக்கப்பட்டு டெரர் கும்மி விருதினைப்பெறும் அந்தத் தளங்கள்.


முதல் பரிசு -         பதிவர்: ஜேகே
                                       வலைப்பூ: வேலிகள் தொலைத்த ஒரு படலையின் கதை!


இரண்டாம் பரிசு - பதிவர்: யுவராணி தமிழரசன்
                                        வலைப்பூ: கிறுக்கல்கள்...
 
இந்த பிரிவிற்கு நடுவர்களாக இருந்து சிறந்த பதிவுகளை தேர்ந்தெடுத்து கொடுத்த திரு. கே.வி.ஆர்  அவர்களுக்கும் திரு.விந்தை மனிதன் ராஜாராம் அவர்களுக்கும் எங்கள் குழுவின் சார்பாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவர்களின் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.


10. HALL OF FAME BLOGGER
நாங்கள் விருதுகள் அறிவிப்பிலே சொன்னதுபோல இது முழுக்க முழுக்க டெரர் கும்மி நண்பர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதற்கும் நாங்கள் தனி வரைமுறையே வைத்திருந்தோம். இதற்கென தனி படிவம்  தயார்  செய்து அதில் பரிந்துரை செய்யும் பதிவர், காரணம்.அவரின் சிறந்த பதிவுகளாக கருதுபவையின் லிங்க் அனைத்தையும் வாங்கினோம்.முக்கியமாக ஒருவர் பரிந்துரைப்பது அடுத்தவருக்கு தெரியாத வண்ணம் பார்துகொண்டோம்.

இவ்வாறு பல கட்ட விவாதங்களுக்கு பிறகு டெரர் கும்மி நண்பர்களால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த HALL OF FAME BLOGGER



தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் எங்களது வாழ்த்துக்கள். இவர்களுக்கு முதல்பரிசாக ரூபாய் 600 க்கான புத்தக  கூப்பனும், இரண்டாம் பரிசாக ரூபாய் 400 க்கான புத்தக  கூப்பனும் வழங்கப்படும்.Hall Of Fame Blogger பிரிவில் தேர்ந்தெடுக்கபட்டவருக்கு ரூபாய் 1000 மதிப்பிலான புத்தகக் கூப்பன் வழங்கப்படும்.பரிசு கூப்பன்கள் அனைத்தும் டிஸ்கவரி புக் பேலஸ் மூலம் வழங்கப்படும். புத்தகங்களை எப்படி வாங்குவது என்ற விபரங்களுடனும் விருதுக்கான லோகோ கோடிங்குடனும் வெற்றி பெற்றவர்களை விரைவில் தொடர்புகொள்கிறோம்.

அனைவருக்கும் நன்றி.


Friday, March 2, 2012

கருவேலம் உண்மையில் கருங்காலியா...? பிரச்சாரங்களும் உண்மைகளும்....!

நாம் அடிக்கடி சொல்வதுதான், எல்லோர்க்கும் விழிப்புணர்வு தருகிறேன் என்ற பெயரில் ஆதாரமற்ற, அபத்தமான விசயங்களை எழுதுபவர்கள் திருந்தினால் நல்லது என்று. அப்படியே அவர்கள் எழுதினாலும் படிப்பவர்கள் என்ன சொல்லி இருக்கிறது, அது சரியா என்றெல்லாம் ஆராய்ந்து பார்ப்பது இல்லை. ஆஹா அருமை என்று டெம்ப்ளேட் கமெண்ட்டுகளை போட்டு அதற்கு துணைபோய் அதே விசயம் மென்மேலும் பரவ காரணமாகிவிடுகின்றனர். இதுதான் இந்த மாதிரி  எழுதுபவர்களுக்கு இன்னும் பலம். இன்னும் சிலர் அடிப்படை அறியாமல் அவர்கள் சொல்வதை முழுதும் நம்பி விடுகின்றனர்.

அண்மையில் ஒரு விசயம் மிக பிரபலமாக இணையத்தில் வளம் வந்தது. அதுவும் மரங்களை வெட்டுங்கள் என்ற தலைப்பில். இதை எழுதியவர் அதனை ஒரு வருடம் முன்பே வெளியிட்டு இருந்தார். அந்த நேரத்தில் சிலர் அப்படி இல்லை என்ற கருத்தை நாசூக்காகச் சொல்லி இருந்தார்கள். சிலரோ இதோ நான் அருவாள் எடுத்துவிட்டேன் எங்கே மரம், வெட்டுகிறேன் என கிளம்பியதே இதில் இருக்கும் தவறான தகவல்களை யாரும் அலசி பார்க்காமல் நம்பிப் போனதுக்கு காரணமாக இருக்கலாம்.  

சில நாள்களில் அந்த பிரச்சினை ஓய்ந்து இப்போது மீண்டும் எங்கேபார்த்தாலும்அதே விசயம் பரவ ஆரம்பித்து இருக்கிறது. சரி நாமும் அப்படி என்னதான் கெடுதல் விரிவாக அறிந்து கொள்வோமே என்று தேடிப்பார்த்தால் ஆச்சர்யமான, அதிர்ச்சியான சில உண்மைகள் விளங்கின. அவைகளைத்தான் இங்கே விளக்கமாக பார்க்க போகிறோம். விசயத்திற்கு செல்லும் முன் வெட்டசொன்ன மரத்தினை பற்றி சிறு அறிமுகம்.

இதன் அறிவியல் பெயர்   : Prosopis Juliflora

நம்மூரில் அறியப்படுவது  :  சீமை கருவேலம் அல்லது வேலிமரம்

இதனை பற்றி முழுவதுமான அறிவியல் விளக்கங்களை தெளிவாக இந்த சுட்டியில் காணலாம்

இந்த மரத்தின் தீமைகளாக எடுத்து வைக்கப்படும் விசயங்கள்... 

1) இந்த மரம் அதிகம் விஷத்தன்மை கொண்டது.

2) இதன் வேர்கள் ஆழமாக சென்று நீரை உறிஞ்சி விடுவதால் நீராதாரம் பாதிக்கப்பட்டு தென்தமிழகத்தின் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற பகுதிகளில் நிலவும் வறட்சிக்கு இவைகளே முக்கிய காரணம்.

3) இந்த மரத்தின் எந்த ஒரு பொருளும் பயன்பாட்டுக்கு உதவாது, முக்கியமாக இலை,காய் (நெத்து), பூ என எல்லாமே விஷத்தன்மையுள்ளது. ஆகையால் கால்நடைகள் தெரியாமல் உண்டுவிட்டால் உயிரிழப்பு ஏற்படும்.

4) நிலத்தடி நீரை விஷமாக மாற்றுவதோடு இல்லாமல் மண்ணின் வளத்தை முற்றிலுமாக சீரழித்து விடும். இது வளர்ந்த இடத்தில் எதையுமே பயிரிடமுடியாது. விவசாய நிலங்களை  ஆக்கிரமித்து விவசாயத்தை கெடுக்கிறது

5) இந்த மரத்தில் கால்நடைகளை கட்டிவைத்தால் அவைகள் மலடாக மாறும் அல்லது கன்றுகள் ஊனமாக பிறக்கும்.

இதே விசயங்கள் இணையம் முழுதும் எங்கும் பரப்பப்பட்டு வருகிறது. ஆனால் உண்மை அப்படியே நேர்மாறாக இருக்கிறது. அதனால் ஒரேயடியாக இந்த மரத்தை விஷம் நிறைந்த மரம் என்று ஒதுக்கி தள்ளுவதற்கு முன் இதனை பற்றி சரியாகத் தெரிந்து கொள்வது கொஞ்சம் அவசியமாகிறது.

இதை இங்கு தெரிவிப்பதின் காரணம் இந்த மரம் நமக்கு மிகவும் அவசியமானது, இதை வீட்டுக்கு ஒன்றாக வளர்க்க வேண்டும் என இந்த மரத்துக்கு பரிந்துபேசி வலியுறுத்த போவதில்லை. மாறாக இந்த மரத்தைப் பற்றிய தவறான தகவல்களை ஆதாரங்களோடு மறுப்பதோடு, சொல்லிக்கொள்ளும் அளவில் இருக்கும் இம்மரத்தின் நன்மைகளையும் பார்க்கப் போகிறோம். 

ஆனால் இதன் பொதுவான தீங்கு விவசாய நிலங்களில் வளர்ந்து விவசாயிகளுக்கு பெரும் தொந்தரவாக இருப்பது. இது பெரியதாக வளர்ந்து விட்டால் இதன் வளர்சித்தன்மையின காரணமாக வேகமாக பரவும். அதுவும் எந்த காலநிலையும்,மண் தன்மையும் இதன் வளர்ச்சியை ஒன்றும் செய்ய முடியாது. பெரும்பாலும் எந்த விவசாயியும் இதனை தனது நிலத்தில் வளர அனுமதிப்பது இல்லை அந்த நிலத்தில் தொடர்ந்து விவசாயம் செய்யும் பொருட்டு. இது ஒன்றுதான் நாம் எதிர்கொள்ளும் தீமை.அதுவும் நாமே அதை வளர அனுமதித்தால் ஒழிய. 

இந்த மரத்தைப் பற்றிய விஷயங்களை கீழ்கண்ட தலைப்புகளில் பார்க்கலாம். 

1) இது விஷம் நிறைந்தது அல்ல.

2) தமிழகத்தின் சில மாவட்டங்களில் நிலவும் வறட்சிக்கு இது தான் காரணமா?

3) இந்த மரத்தில் இருந்து கிடைக்கும் பொருள்களை  வைத்து எவ்வாறு பயனடையலாம்.

4) இதனை ஒன்றுக்கும் உதவாத அதாவது உப்பு, உவர் நிலங்களில் வளர்ப்பதால் என்னமாதிரியான பயன்களை தருகிறது.

5) இது கால்நடைகளுக்கு எவ்வாறு மருந்தாக,உணவாக பயன்படுகிறது.

6) இதனால் சமூகத்தில் இருக்கும் பொருளாதார தாக்கம் என்ன முக்கியமாக ஏழைகளின் வாழ்வில்.

7) மின்சார தயாரிப்பில் இதன் பங்கு. 

1. விஷச்செடியா?? 

இது விஷச்செடி வகையை சார்ந்ததா என்றால் நிச்சயமாக இல்லை. விஷச்செடி என்றால் அரளிச்செடியை சொல்லலாம். இந்த முறையில் பார்த்தால் இந்த மரத்தினால் உயிரினங்களுக்கு அந்த மாதிரியான எந்த பாதிப்பும் இல்லை. மேலும் இதன் முள் விஷத்தன்மை வாய்ந்தது, இலையை தின்றால் உயிரிழப்பு என்பதெல்லாம் முற்றிலும் ஆதாரமற்ற விசயங்களே. 

2. வறட்சிக்குக் காரணமா? 

அடுத்து சில மாவட்டங்களில் நிலவும் வறட்சிக்கு இதுதான் முக்கிய காரணம் என்பது அபத்தமானது. வறட்சி என்பது ஒருவகையில் மட்டும் வருவது இல்லை. பல காரணிகள் பின் நிற்கின்றன. மண்வளம், நிலத்தடி நீரின் அளவு, காற்றில் நிலவும் ஈரப்பதம் போன்ற காரணிகள். இந்த மரமே இதை சுற்றியுள்ள காலநிலையை நிர்ணயிக்கிறது என்பதும் சரியில்லை.

குறிப்பாக விருதுநகர்,ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலவும் வறட்சிக்கு அங்கு நிலவும் மண்வளமே காரணம். மண்ணில் காணப்படும் கால்சியம் கார்பனேட் (Calcium carbonate) மண்ணின் வளம் மேம்படுவதை வெகுவாக பாதிக்கிறது. வைகைப் படுகை இடங்களைத் தவிர மற்ற இடங்களில் மணல், உவர்நிலங்களாகவே இருக்கின்றன

இப்படி அதிகமாக காணப்படும் தரமற்ற மண்ணில் மரவகைகள் செழித்து வளர்வது முடியாத காரியம். ஆனால் இந்த கருவேலம் மரத்துக்கு மண் வளம் பெரிய பிரச்சினையே இல்லை. முக்கியமாக உவர், உப்பு நிலங்களில் கூட செழித்து வளரும். இதுவளரும் சூழ்நிலையில் மற்ற மரங்கள் வளர்வது சாத்தியமற்றது.

இந்த வறட்சியான சூழ்நிலையை கருத்தில் கொண்டுதான் பென்னி குக் பெரியார் அணையே கட்டினார். ஏனென்றால் வைகை ஆற்றில் இருந்து கிடைக்கபெரும் நீர் அங்கு நிலவும் வறட்சியை தாக்குப்பிடிக்க முடியாது என்று எண்ணியதே. முக்கியமான விசயம் என்னவென்றால் பல நூறு வருடங்களுக்கு முன்னரே இந்த வறட்சி இருந்து இருக்கிறது. ஆனால் கருவேலம் இந்தியாவுக்கு வந்தது 1857 ல் தான். அதுவும் தமிழகத்துக்கு இதன் வருகை கொஞ்சம் காலம் தள்ளியே இருக்க வேண்டும். பார்க்க..

///the earliest recorded introduction of P. juliflora was in 1857, the first systematic plantations were not carried out until 1876 ~ 77 in the Kaddapa area of Andhra Pradesh. It was introduced into parts of Gujarat in 1882 ///

ஆனால் பெரியாறு அணை கட்டும் திட்டம் 1807 ல் அடிப்படை வேலைகள் தொடங்கி சில பிரச்சினை வந்து அப்புறம் 1882 ஆம் ஆண்டில் முழுவதும் கட்டி முடிக்கபெற்று இருக்கிறது. இந்த அணை கட்டுவதற்க்கு முன்பே நிலவிய வறட்சியின் காரணமே இதனை உருவாக்கும் எண்ணம்அவருக்கு தோன்றி இருக்கிறது.


எனவே இந்த கருவேலம் மரம்தான் அங்கு நிலவும் வறட்சிக்கு முழுக்காரணம் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்வதில் அர்த்தமில்லை. மேலும் மற்ற மரங்கள் வளரமுடியாத அந்த உவர் நிலங்களில் இந்த கருவேல் மரம் வளர்ந்து அப்பகுதி மக்களுக்கு கரிமூட்டம், அடுப்பு எரிக்க விறகு போன்ற விசயங்களுக்கு உதவுகின்றது.

 3. எப்படி பயனளிக்கிறது...?

எரிபொருளாக

இந்த மரத்தில் இருந்து கிடைக்கும் பொருள்களை அப்படியே விஷம் என்று சொல்லி ஒதுக்கி இருந்தால் இந்நேரம் அதிக இழப்புகளை சந்தித்து இருப்போம். முக்கியமாக ஏழை மக்கள். அவர்களுக்கு முக்கியமான எரிபொருளாக பயன்படுவது இந்த மரமே. பார்க்க பக்கம் 137 & 138, http://www.iamwarm.gov.in/Environment/report.pdf

அதோடு ஏழைமக்களுக்கு வேலையோடு நிலையான வாழ்வாதாரத்தையும் இந்த மரங்கள் கொடுத்து வருகின்றன. மிகவும் வறட்சி மற்றும் பொதுவான மரங்கள் செழித்து வளர முடியாத இடங்களில் வாழும் மக்களுக்கு இந்த மரத்தை விட்டால் வேறு மாற்றுவழி இல்லாததே காரணம். இதன் விதைகளையும் மாவாக்கி பயன்படுத்தலாம் என்றும் சொல்கிறார்கள். பார்க்க பக்கம் 7 ~ 10 .. http://www.cazri.res.in/envis/pdf/3no3-4.pdf

வாழ்வாதாரத்தைப் ஏழைகளுக்கு கொடுப்பதில் இதன் விறகு முக்கியத்தன்மை பெறுகிறது. இதில் இருந்து கரிமூட்டம் மூலமாக தயாரிக்கப்படும் கரி பல்வேறு உபயோகங்களுக்கு பயன்படுகிறது. முக்கியமாக் சிறு தீப்பெட்டி தொழிற்சாலைகள், செங்கல் சூளைகள் உணவகங்கள், கொள்ளபட்டரை, தாது பொருள்களை பிரித்து எடுக்கும் பெரிய தொழிற்சாலைகள் என பட்டியல் நீளும். பார்க்க பக்கம் 1 ~ 2 http://www.currentsciencejournal.info/issuespdf/Saraswathi%20Prosophis.pdf.  

உணவாக

அடுத்து இதன் நெத்து (காய்), மற்றும் அதில் இருந்து பெறப்படும் விதைகள் விலங்குகளுக்கும்,மனிதர்களுக்கும் உதவுகின்றன. ஆடு மாடுகளுக்கு இதையே உணவாக கொடுக்கிறார்கள். இதில் ப்ரோடீன் சத்து நிறைவாக இருப்பதாகவும் இதை உணவாக உண்பதால் கால்நடைகள் நலமாக வளர்வதாக சொல்கிறார்கள். பார்க்க பக்கம் 11 ~ 14 & 28.  http://www.issg.org/database/species/reference_files/progla/Mwangi&Swallow_2005.pdf 

இதனை மரமாக எப்படி திறன்மிக்க முறையில் வீட்டு உபகரணங்கள், கரிமுட்டம் இவற்றிக்கு பயன்படுத்தலாம் என்பதை பார்க்க பக்கம் 77 ~ 81 http://www.gardenorganic.org.uk/pdfs/international_programme/ManagingProsopisManual.pdf 

ஆச்சரியப்படும் விசயம் என்னவென்றால் இதன் விதையை மாவாக்கி அதை மனிதர்களும் உணவுப் பொருள்களாக பயன்படுத்துவதுதான். அதுவும் இது மிகவும் சத்து நிறைந்த ஒன்றாக அதாவது இதில் ப்ரோடீன் 10%, fiber 14%  கலந்து இருப்பதுதான். இதை கொண்டு தயாரிக்கப்பட்ட ரொட்டிக்கும், கோதுமை மாவினால் செய்த ரொட்டிக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை. அதோடு பிரேசில், பெரு போன்ற நாடுகளில் இந்த விதைகளை அரைத்து காபியாக குடிக்கிறார்கள். பார்க்க பக்கம் 84 ~ 86  (தொடர்ந்து வரும் பக்கங்களில் எப்படி மருந்தாக பயனளிக்கிறது என்பதயும் பார்க்கலாம்) http://www.gardenorganic.org.uk/pdfs/international_programme/ManagingProsopisManual.pdf

4. உவர்நிலங்களில் மண்ணின் வளம் மேம்படுதல் 

இது வளர மண்வளம் தேவை இல்லை என்பதை பார்த்தோம். சாதாரண மரங்கள் வளர முடியாத மண்வளத்தில் அதாவது உப்பு,உவர்,மற்றும் அமிலத்தன்மை அதிகம் கொண்ட மண்ணில் இது செழித்து வளருவதோடு அந்த மண்ணின் தன்மையை மாற்றியமைக்கிறது. அதாவது அதில் உள்ள கேடுகளை நீக்கி ஒருவகையில் மண்ணின் வளத்தை மேம்பட செய்கிறது.

உவர்,உப்பு தன்மை கொண்ட நிலங்ககளில் உள்ள அமிலத்த தன்மையை இந்த மரத்தை அதில் பயிரிடுவதன் மூலம் அந்த மண்ணை மேம்படுத்தலாம் என்பதை ஆராய்ச்சியின் மூலமாக நிரூபித்து உள்ளார்கள்,

கர்நாடக மாநிலம் சித்திரதுர்க்கா என்னும் மாவட்டத்தில் அதிகம் உப்புத்தன்மை கொண்ட சாதரணமாக மரங்கள் வளர முடியாத நிலம் சோதனைக்கு எடுத்துகொள்ளப்பட்டு அதில் இந்த மரத்தை நட்டுவளர்த்து அதற்கு பின் அந்த மண்ணில் ஏற்ப்பட்ட மாற்றத்தை கணக்கிட்டு இதனை நிரூபித்து உள்ளார்கள்

இந்த ஆய்வில் முற்றிலும் உப்புத்தன்மை கொண்ட நிலமாக இருந்த இடத்தில் கருவேலம் மரத்தை சில வருடங்கள் வளர்ததின் மூலம் அதில் உள்ள கனிமங்கள் எவ்வாறு மாறி இருக்கிறது என்பதை தெளிவாக இங்கு காணலாம். பார்க்க பக்கம் 1 ~ 3   http://pub.uasd.edu/ojs/index.php/kjas/article/viewFile/354/339 

அவர்களின் ஆய்வின்படி இந்த மரம் மண்ணில் உள்ள ஆர்கானிக் கார்பன் (organic carbon) மண்ணில் அதிகமாக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த organic கார்பன் மண்ணின் வளத்தில் முக்கியபங்கை வகிக்கிறது என்பதை இந்த இணைப்பில் படித்து தெரிந்து கொள்ளலாம். பார்க்க பக்கம் 1 ~ 3   http://www.esd.ornl.gov/~wmp/PUBS/post_kwon.pdf 

இன்னொரு ஆய்வு தொழிற்சாலைகள் அதிகம் இருக்கும் இடமான கோயம்புத்தூர் பகுதியில் செய்யப்பட்டு இருக்கிறது. பொதுவாக தொழிற்சாலைகள் இருக்கும் இடங்களில் அதில் இருந்து வெளியாகும் சிறு உலோக துகள்களால் மண்ணின் வளம் கண்டிப்பாக பாதிக்கப்படும்

கொஞ்சம் கொஞ்சமாக சேரும் இந்த துகள்கள் நாளடைவில் மண்ணின் மேற்பரப்பில் ஒரு தடுப்பு போல அமைந்து மற்ற தாவர இனங்கள் வளர முடியாதபடி செய்துவிடும். இந்த ஆய்வின் படி அந்த பகுதியில் இருந்த தாமிரம் மற்றும் காட்மியம் போன்ற உலோகதுகள்களால் பாதிப்படைந்த நிலத்தில் இம்மரங்களை வளர்த்து ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வில் அதிகமாக உலோகதுகல்களால் பாதிப்படைந்த நிலம் கொஞ்சம் கொஞ்சமாக அதன் தன்மையில் இருந்து மாறி வருவது கண்டறியப்பட்டது

இதில் காட்மியம் எனும் உலோகம் மிக அபாயம் நிறைந்த ஒன்று என்பதால் இந்த நிலங்ககளில் வளரும் மரத்தின் எந்த ஒரு பொருளையும் மக்கள் தங்கள் கால்நடை பயன்பாட்டுக்கு கிடைக்காமல் செய்யப்படவேண்டும் என அறிவுருத்தபடுகிறது.  மண்ணில் இருக்கும் ஆபத்தான உலோகங்களை மரமே உறிஞ்சி எடுத்துக் கொள்வதாலேயே இப்படி சொல்லப்படுகிறது (இந்த காட்மியம் உலோகம் ஒரு வகைp புற்றுநோய்க்கு காரணமாக இருக்கிறது என்று அறிக). பார்க்க  http://www.ncbi.nlm.nih.gov/pubmed/16054919 

5. கால்நடைகளுக்கு மருந்து 

இதை உண்டால் கால்நடைகள் இறந்துவிடும் அல்லது மலடாக மாறிவிடும் என்ற ஜல்லியடிப்புகள் விழிப்புணர்வு என்ற போர்வையில் பரப்பப்பட்டு இருக்கிறது என்பதை கிழே உள்ள விசயங்களை படிப்பதின் மூலம் உணரலாம்.

இதன் இலைகளை கால்நடைகள் உண்ணாது எனபது உண்மை. இதன் நெத்து (காய்) சத்து பொருள்கள் நிறைந்த ஒரு உணவாக கால்நடைகளுக்கு கொடுக்கப்படுகிறதுவறட்சி காலங்ககளில் ஏற்க்கனவே சேகரித்து வைக்கப்பட்டு இருக்கும் இந்த நெத்துக்களை தங்களின் கால்நடைகளுக்கு கொடுக்கின்றனர், வறட்சியான நிலங்களில் வசிப்பவர்கள். பார்க்க பக்கம் 82   http://www.gardenorganic.org.uk/pdfs/international_programme/ManagingProsopisManual.pdf 

இந்த மரத்தினால் மலட்டுத்தன்மை உண்டாகிறது என்று அபத்தமாக எந்த வித ஆதாரமும் இல்லாமல் எப்படி பொத்தம் பொதுவாக சொல்ல முடிந்ததோ தெரியவில்லை. காரணம் இந்த விதைகளே ஆடுகளின் மலட்டுத்தன்மையை போக்கும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. எப்படி உண்மையை நேர்மாற்றமாக பரப்பி வருகிறார்கள் பார்த்தீர்களா?

அதாவது ஒருகிராமத்தில் உள்ள இரண்டு வெவ்வேறு ஆட்டுமந்தைகள் சோதனைக்கு எடுத்து கொள்ளப்பட்டு ஒரு பிரிவில் இந்த நெத்தை அல்லது இதன் விதைகளை பார்லி உடன் சேர்த்து உணவாகக் கொடுக்கபட்டது. மற்ற பிரிவில் இந்த உணவு வழங்கப்படவில்லை.இந்த விதைகளை சினை காலங்களில் ஆட்டுக்கு கொடுப்பதின் மூலம் அவற்றின் சினை பிடிக்கும் திறன் அதிகரித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பார்க்க http://www.dfid.gov.uk/r4d/PDF/Outputs/R6953e.pdf 

6. பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி 

விவசாயம் ஏதும் செய்ய முடியாத, வறட்சி மிகுந்த நிலங்களில் வாழும் ஏழை மக்களுக்கு இந்த மரங்களினால் ஏற்படும் நன்மைகள் ஏராளம். இதனை ஏழைகளுக்கான மரம் என்றே சொல்கிறார்கள். ஆனாலும் முதலில் சொன்னபடி இது தொடர்ச்சியாக விவசாயம் செய்யும் நிலங்களில் வளருவதால் விவசாயிகள் பாதிப்படைந்து அரசாங்கத்திடம் இதன் முற்றிலும் அளிக்கும் திட்டத்தினை செயற்படுத்துமாறு நிர்பந்திக்கிரார்கள்.

இவர்கள் சொல்படியே நமது மாநிலத்தில் இருக்கும் எல்லா மரங்களையும் அழித்துவிட்டால் இதனை எரிபொருளாக,தொழிலாக பயன்படுத்துவோரின் நிலை என்னவாக இருக்கும். அதே நேரத்தில் நல்ல செழிப்பான பகுதிகளில் இருக்கும் மற்ற எல்லா விவசாயிகளும் இதனை தனது நிலத்தில் வளரவிடாமல் முன்னெச்சரிக்கையாக இருந்தாலே போதுமானது அல்லவா?

அதற்கு விளை நிலங்களை எந்த காரணம் கொண்டும் தரிசாக வைத்து இருக்கக் கூடாது. தொடர்ந்து சில வருடங்ககள் வரை கண்டுகொள்ளாத நிலங்களாக இருந்தால் கண்டிப்பாக இந்த மரங்கள் வளர வாய்ப்பு இருக்கிறது. எனவே முடியாத பட்சத்தில் வருடத்தில் ஒருமுறையாவது தனது நிலத்தில் இருக்கும் தேவையில்லாத செடிகளை அகற்றும் பணியில் செயல்பட வேண்டும். அது ஆட்களை வைத்து அகற்றுவதாக அல்லது உழவு அடிப்பதான முறையில் இருக்கலாம். இதுதான் அவர்களுக்குண்டான விழிப்புணர்வைக் கொடுக்கும் விசயமாக இருக்கழ்மே தவிர மற்றவர்களுக்கு வேறு விதத்தில் பயனளிக்கும் ஒன்றை மொத்தமாக அழிப்பது என்பதை எதில் சேர்ப்பது ?

இந்த மரத்தைப் பயன்படுத்துவோரின் நலனை கருத்தில் கொள்ளும் வகையில் சில விசயங்களை இந்த இணைப்பில் காணலாம் பார்க்க  http://www.gardenorganic.org.uk/pdfs/international_programme/Prosopis-PolicyBrief-2.pdf 

7. மின்சார தயாரிப்பில் இதன் பங்கு   

மின்சாரம் தயாரிப்பதில் இருக்கும் சிக்கல்கள், மின்சாரத்தின் அவசியம் எல்லாவற்றையும் தமிழ்நாட்டு மக்களுக்கு இப்போதைய நிலையில் நான் எதையும் ஆதாரத்தோடு விளக்க வேண்டிய அவசியம் இல்லையென நம்புகிறேன். அனைத்தையும் அனுபவப் பாடமாக படித்துக்கொண்டு இருக்கிறோம்.

இருக்கும் மின்தட்டுப்பாட்டை அணுமின்நிளையம் வைத்து போக்க முயன்றால்பாதுகாப்பு,சுற்றுப்புற சூழ்நிலை நலன் கருதி முடக்கி வைத்தாயிற்று. மற்ற முறையில் எடுக்கப்படும் மின்சார முறையில் ஏற்ப்படும் இழப்புகளும் அதிகம். அனல்மின்சாரம் எடுக்கும் இடங்களில் இருந்து வெளியேற்றப்படும் புகை, பிற கழிவுகளை எல்லோரும் அறிந்ததே.

இந்த மாதிரியான நிலையில் ஒரு நல்ல தீர்வை முடிவாக எடுப்பது உடனடி தேவை. அந்த தீர்வும் உடனடியாக கிடைக்கும் தருவாயில் இருப்பதாக இல்லை.இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மிக அதிகச்செலவில் மாற்று மின்சார முறைகளை புதியாதாக ஆராய்ந்து புதிய தொழில்நுட்பங்களை நடைமுறைபடுத்துவது என்பது அதிக காலமும்,பண விரயத்தையும் கொண்ட செயல். அதிலும் முழு பயன் கிடைக்கும் என்று உறுதியாக சொல்ல முடியாது.   

இந்த நிலையில் நமது நாட்டில் கிடைக்கும் அதிகமான உதிரிப்பொருள்களை   ஆதாயமாக வைத்து சில திட்டங்ககளை செயல்படுத்தினால் நல்ல பலனோடு அதை கொடுப்பவர்களின் வழக்கையும் உயர வாய்பிருக்கிறது. அந்த வகையில் பார்த்தால் Biomass Power Generation  என்ற முறை சிறப்பான ஒன்று.

இந்த முறையில் இயற்கையாக கிடைக்கும் கனிம அல்லது மற்ற பொருள்களை வைத்து மின்சாரம் தயாரிக்கப்படுகின்றதுநாம் கொட்டும் குப்பைகள் கூட ஒருவிதத்தில் இதுக்கு உதவும் என்கிறார்கள். குப்பையை பயன்படுத்துவதின் மூலம் அதை வேறொரு முறையில் அழிக்கும் போது இருக்கும் பாதிப்புகள் தவிர்க்கப்படுவதோடு பயனாக மின்சாரம் கிடைக்கிறது.

தமிழ் நாட்டில் இந்தமாதிரியான சிறு மின்நிலையங்கள் சில இடங்களில் நடைபெற்றுவருகிறது. இங்கே முக்கியமான விசயம் என்னவென்றால் அதற்கு எரிபொருளாக கருவேல் மரத்தின் விறகுகள் பயனபடுத்தப்படுகின்றன.  இந்த மரவிறகுகள் அதிக எரிசக்தி கொண்டவையாக இருப்பதால் நல்ல பலனும் கிடைக்கிறது. மற்ற வழிமுறைகளைவிட குறைந்த அளவே கார்பன் டை ஆக்சடை வெளியிடுகிறது. (பக்கம் 23, 24). http://www.sgsqualitynetwork.com/tradeassurance/ccp/projects/395/BMC-PDD-Final%5B1%5D.pdf 

இதனால் இன்றைய அத்தியாவசியத்த் தேவையான மின்சாரமும் கிடைப்பதோடு பிந்தங்கிய மாவட்டங்களில் வாழும் இந்த மரத்தை சார்ந்து தொழில்செய்வோரின் வாழ்வாதாரமும் உயரும் என்பதில் சந்தேகமில்லை

இந்த Biomass Power Generation  எவ்வாறு இயங்குகிறது அதற்கு உண்டான வழிமுறைகள் என்னென்ன போன்ற விசயங்களை தெளிவாக இந்த இணைப்பில் படிக்கலாம். கொடுமை என்னவென்றால் இது திருநெல்வேலி பகுதிகளில்தான் அதிகமாக இருக்கிறது. சொந்த ஊரில் இந்த மாதிரியான விசயங்ககளை வைத்துக்கொண்டு விழிப்புணர்வு என்ற பெயரில் எதையுமே ஆராய்ந்து பார்க்காமல் ஜல்லியடித்து இருப்பவர்களை என்ன சொல்வது....? பார்க்க  

இது எவ்வாறு சாத்தியம் என்பதில் சந்தேகம் இருந்தால் அறிவியல்பூர்வமான செயல்முறை விளக்கம் இங்கே காணலாம் பார்க்க,

ஒவ்வொன்றையும் தெளிவாக விளக்கவே நினைத்தோம். படிப்பவர்களுக்கும் எளிதாக இருந்திருக்கும். ஆனால் கட்டுரையின் அதிக நீளம் கருத்தில் கொண்டு பல இடங்களில் "பார்க்க பக்கம்" என்று போடவேண்டியாதாகிவிட்டது. எப்படியோ இதன் மூலம் கருவேலம் ஒரு நச்சுப்பொருள் இல்லை என்பதோடு அதனால் எப்படியெல்லாம் பயனடைகிறோம் என்பதை விளக்கமாக தெரிந்து இருப்பிர்கள். முக்கியமாக விழிப்புணர்வு என்ற பெயரில் உண்மை என்னவென்று அறிந்து கொள்ளாமல் அபத்தங்களை எழுதி பரப்பியவர்களின் நோக்கம் என்னவென்றாவது புரிந்து இருக்கும்.

டெரர் கும்மிக்காக எழுதியவர்கள்
.